அதிகாரங்களை முழுமையாக பிரதமருக்கு மாற்ற ரணில் முற்படுகின்றார்: சம்பிக்க குற்றச்சாட்டு
நாம் முன்வைத்த 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும் 19ஆவது திருத்தத்தினை மாற்றியமைக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டுகின்றார். ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முழுமையாக பிரதமர் வசம் மாற்றியமைக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாடட்டியிருக்கின்றார்.
19 ஆவது திருத்தம் தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையின் மீண்டும் விவாத்திற்கு உட்படுத்தி விட்ட தவறுகளை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் திடீரென முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இதனை ஹெல உறுமய எதிர்ப்பது ஏன் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதானது.
“19ஆவது திருத்தத்தினை செயற்படுத்த வேண்டும். ஜனாதிபதிக்கு இருக்கின்ற சர்வாதிகார தன்மையினை கட்டுப்படுத்த வேண்டும் என்றதனை வலியுறுத்தியே ஜாதிக ஹெல உறுமய 19 ஆவது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்தது. அப்போது நாட்டின் நிலைமைகளுக்கு அமைய ஜனாதிபதிக்கான சர்வாதிகார போக்கினை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்ற பிரதான விடயத்தினை கருத்திற் கொண்டே தாம் இதனை முன்வைத்தோம். ஆனால் எந்தவொரு இடத்திலும் ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாக நீக்குமாறு இதில் சுட்டிக் காட்டப்படவில்லை.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்று அதில் விவாதிக்கப்பட்டதுடன் அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் வாத பிரதிவாதத்திற்கு பின்னர் இணக்கப்பாட்டிற்கு வந்தோம். பின்னர் வர்த்தமாணி அறிவித்தலில் வெளியிட தீர்மானிக்கப்பட்டபோதும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க இதனை அவசரப் பிரேரணையாக முன்வைக்க தீர்மானித்தார்.
அதே போல் இணக்கப்பாட்டிற்கு எட்டப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் அல்ல, பிரதமர் ரணிலினால் முன்வைக்கப்படவிருந்த 19ஆவது திருத்தம் இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப்பதுபற்றி நாம் பேசிய போதும் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கி பிரதமருக்கான அதிகாரங்களை பலமிக்கதாக கூட்டிக்கொள்ளும் சதித்திட்டமே இதன் பின்னணியில் உள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க சூழ்ச்சியினையே மேற்கொள்கின்றார். இதற்கு நாம் எமது எதிர்ப்பினையே வெளிப்படுத்துவோம்.
19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கட்சித் தலைவர்கள் மாநாட்டில் விவாதத்திற்கு கொண்டுவரப்படவேண்டும். தேசிய நிறைவேற்று சபையில் மீண்டும் இது தொடர்பில் கலந்தாலோசித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.