அமைதியாக வாக்களிப்பு ஆரம்பம்! யாழ்ப்பாணத்தில் காலையிலேயே உற்சாக வாக்களிப்பு
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்யும் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7 மணி க்கு ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் 12,316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
காலையில் கிடைத்த தகவல்களின்படி, வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது. காலையில், வாக்களிப்பு மந்த கதியிலேயே இடம்பெறுவதாக அனைத்துப் பகுதிகளிலுமிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் காலையிலேயே வரிசையில் நன்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் இம்முறை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் பிரதானமாக இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பொது எதிரணியின் சார்பில் பொது வேட்பாளராக மைததிரிபால சிறிசேனவும் போட்டியிடுகின்ற நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையிலேயே கடுமையான போட்டி காணப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல்கள் வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவிவகித்த ஒருவர் மூன்றாவது தடவையாக போட்டியிடுகின்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் தேர்தலில் 1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். அத்துடன் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் 12316 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 1419 வாக்குகளை எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தபால் மூல வாக்குகள் 303 நிலையங்களிலும் சாதாரண வாக்குகள் 1109 நிலையங்களில் எண்ணப்படும்.
பிரதான வாக்கு எண்ணும் நிலையங்கள் நாட்டின் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் 1076 சாவடிகள் கம்பஹாவில் 1053 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் குறைந்தளவிலான வாக்கு சாவடிகளாக மன்னார் மாவட்டத்தில் 76 கிளிநொச்சி மாவட்டத்தில் 96 என நிறுவப்படவுள்ளன.
ஒரு வாக்காளிப்பு நிலையத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கி ஏந்திய 2 பொலிஸ் காண்ஸ்டபிள்கள் அல்லது சார்ஜன்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அந்தவகையில் 12316 வாக்களிப்பு நிலையங்களுக்கும் 240000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
தேர்தலின் போது அவசர நிலமை ஒன்று ஏற்படும் இடத்து அதனை சமாளிக்கும் விதமாக 43 பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சர்களின் கீழ் விஷேட அதிரடிப்படையினரை உள்ளடக்கிய படையணியொன்றும் உருவாக்கப்ப்ட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
மாலை 4.00 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும். வாக்குகளை எண்ணும் பணி இரவு 7.00 மணியளவில் ஆரம்பமாகும். இரவு 10.00 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை வெளிவரத் தொடங்கும். நாளை நண்பகல் முழுமையான முடிவுகளும் வெளிவரும்.