செய்திகள்

இனப் பிரச்சினைக்கு தீர்வு குறித்து இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதியுடன் பேச்சு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எஸ். சிவநேசன் மற்றும் எஸ். சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் பிரதானமாகப் பின்வரும் விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்:

 

* மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பான விவகாரங்கள்

 

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள்

 

* குறிப்பாகத் திருகோணமலைப் பிரதேசத்தில் சமீபத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

 

மேலும், நாட்டின் நல்லிணக்கச் செயன்முறையைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆட்சேபனைகளையும் அச்சங்களையும் ஜனாதிபதியிடம் வெளிப்படையாக எடுத்துரைத்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.