ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.மேலும் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இம்முறை 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளன.குறித்த அறிக்கையும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்ததுடன், அந்த அறிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி 12 மணிவரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன.அதன்படி, 22ஆம் திகதி நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.(15)




