காணாமல் போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் நண்பர்கள் ஏற்பாடுசெய்த மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திப்பூங்காவில் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை 8.30மணிக்கு ஆரம்பமான இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை 5.30மணிவரை நடைபெறும் .
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணாமல்போன,கடத்தப்பட்ட,கைதுசெய்யப்பட்டவர்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தின்போது விடுக்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தாங்கள் இந்த போராட்டத்தினை தொடர் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாக இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமது உறவினர் பலர் காணாமல்போன நிலையில் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள இரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ள அவர்கள் புதிய அரசாங்கம் அவர்களை விடுவிக்கவோ அல்லது அவர்கள் உள்ளார் என்ற தகவலையாவது தங்களுக்கு வழங்கவேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது உறவுகள் காணாமல்போன நிலையில் அவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியான நிறுத்துமாறும் தமது உறவுகள் உயிருடன் இருப்பதாகவும் இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த அரசாங்கம் தமக்கு செய்த துரோகத்தினை இந்த அரசாங்கம் செய்யாது என தாங்கள் நம்புவதாகவும் தமது உறவுகளை மீட்டுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு இன்று அரசியல்வாதிகளாக சொகுசுகளை சிலர் அனுபவித்துவருகையில் எதுவும் அறியாத எமது உறவுகளை அடைத்துவைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
புதிய அரசாங்கத்திற்கு எமது உறவுகளை மீட்டுத்தருவார்கள் என்ற காரணத்தினால் தாங்கள் வாக்களித்தபோதிலும் காணாமல்போனவர்கள் தொடர்பில் எதுவித நல்ல சமிக்ஞையையும் காட்டவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த உண்ணா விரத போராட்டத்தின்போது இதில் பங்குகொண்ட சிலர் ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றனர்.எனினும் அங்கு அனைவரையும் உட்செல்வதற்கு பொலிஸார் அனுமதி வழங்காத நிலையில் மூன்று பேர் சென்று மட்டகடகளப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.