கெப் ரக வாகனம் விபத்து: ஒருவர் பலி! இருவர் படுகாயம் (படங்கள்)
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டனிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகல யட்டிதேரிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் கெப் ரக வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் சாரதியும் மற்றொருவரும் படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவ்விபத்து 29.05.2015 அன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனா்.
எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்க சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.
விபத்தில் உயிரிழந்தவா் பலாங்கொடை வேகபிட்டிய பகுதியை சேர்ந்த அனுர பிரியந்த வயது 33 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.