கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை நிறுவுவதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயார் – நிதி அமைச்சர்
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது.அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.சீன சபாநாயகர் லி ஜான்-ஷுவுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட மற்ற முதலீடுகளுக்கு சீனா உதவும் என்று சீன மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் லி ஜான்ஷு கூறினார். நெருங்கிய நண்பராக இலங்கை பொருளாதாரத்திற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக சீன சபாநாயகர் இதன்போது உறுதியளித்தார்.மேலும் இந்த கலந்துரையாடலை முன்னோக்கி கொண்டு செல்லவும் அவர் உறுதி பூண்டார்.
தற்போதைய கொவிட் நிலைமை முடிந்த பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.(15)




