சமூக, பொருளாதார முன்னேற்றத்தை கட்டியெழுப்புவோம்
தமிழ் – சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் மக்களுக்காக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘பாக்கியம் மிகுந்த சித்திரை மாதத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் சூரியத் திருவிழாவானது, இயற்கைக்கும் மனிதனுக்கும் மத்தியில் காணப்படும் அன்னியோன்ய உறவை அர்த்தமிக்கதாக மாற்றக் கூடிய, சூரியபகவான் முதலான முழு இயற்கைக்கும் நன்றியைத் தெரிவிக்கும், தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய கலாசாரத் திருவிழாவாகக் காணப்படுகிறது. புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தற்போது அனைவருக்கும் சுதந்திரமாக புத்தாண்டைக் கொண்டாடக்கூடியதொரு சூழல் நாட்டிலே உருவாகியுள்ளது. அதற்காக வேண்டி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன்’ என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
‘பெற்றுக்கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தோடு ஒன்றிணைந்து செயற்படவும் இப்புத்தாண்டில் உறுதிபூணுவோம். அனைத்து இலங்கையருக்கும் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த சுபீட்சம் மிக்கதாக இப்புத்தாண்டு அமையட்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
n10