சிவசேனா தலைவர் மீது வாள் வெட்டு!
சிவசேனா தலைவரை பட்டப்பகலில் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் – பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தாபர்.
இவர் லூதியானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொலிஸார் ஒருவர் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர், அவரை வழமறித்து தாங்கள் கொண்டு வந்த வாளால் தாக்கினர்.
அவர்களை தடுக்க முயன்ற பொலிஸாரை அங்கு வந்த மற்றொருவர் வீதி ஓரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் சந்தீப்பை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் வீதியில் மயங்கி கீழே விழுந்தார்.
அதன் பின்னர், அவர்கள் இருவரும் அந்த இருசக்கர வாகனத்தை எடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அன்று காலை ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தீப் தாபர், சீக்கியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த இரண்டு பேர் கொண்டு கும்பல் சந்தீப்பை வாளால் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் பரபரப்பான வீதியில் சிவசேனா கட்சித் தலைவரை வாளால் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-(3)