செய்திகள்

அமெரிக்க- இலங்கை உறவுகளை உச்சத்துக்கு கொண்டு செல்வேன்

வெளிவிவகாரச் செயலர் பதவியின் மூலம் தாம் அமெரிக்கா- இலங்கை  இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தவுள்ளதாக, அமெரிக்காவுக்கான இலங்கை  தூதுவர் பதவியில் இருந்து விலகும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான தூதுவராக பணியாற்றிய பிரசாத் காரியவசம்,  வெளிவிவகார அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அவருக்கு  பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரசாத் காரியவசம், “ இலங்கை  வெளிவிவகார செயலராக பதவியேற்பது மகிழ்ச்சி தருகிறது.

இலங்கை  – அமெரிக்கா ஒத்துழைப்பை மிகச் சிறந்த – புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு, தொடர்ந்தும் பங்களிப்புச் செய்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்

அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியை விட்டுச் சென்றாலும், அமெரிக்க- இலங்கை  உறவுகளுக்கான தூதுவராக தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்.” என்று கூறினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரியாவிடை நிகழ்வில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான இணைச் செயலர் தோமஸ் சானொன் மற்றும் இலங்கைவின் நலன் விரும்பிகள், அமெரிக்க அரச பிரதிநிதிகள், வொசிங்டனில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், வர்த்தக பிரமுகர்கள்,, சிவில் சமூக மற்றும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

n10