செய்திகள்

இலங்கையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐ .நா மனித உரிமை ஆணையாளர் கவலை தெரிவிப்பு

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பசெலெட் கவலை வெளியிட்டுள்ளார்.கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு போலியான செய்திகள் மற்றும் இணைய ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.கொவிட் 19 காரணமாக பல நாடுகளில் தணிக்கைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மிச்செலே பச்செலெட் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுகின்றனர்.கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பதில் பொலிஸ்மா அதிபர் கொரோனா வைரஸ் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை விமர்சிப்பவர்கள் அல்லது சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களை கைதுசெய்யப் போவதாக மிரட்டினார்.போலியான அல்லது தீங்குவிழைவிக்கும் செய்திகளை பரப்புபவர்களையும் கைதுசெய்யப்போவதாக அவர் எச்சரித்தார்.அதிகாரிகளை அல்லது கொள்கைகளை விமர்சிப்பதற்காக கைதுசெய்வது என்பது அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கை என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை பொலிஸிற்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் இப்பிராந்திய நாடுகளில் ஏற்கனவே பொய்யான செய்திகள், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் சட்டங்கள் காணப்படுகின்றன. அவை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான முறையான பேச்சுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் சட்டபூர்வமான தன்மை, தேவை, சட்டம் ஆகிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஒரு நிலையற்ற காலகட்டத்தில் தவறான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்தற்கு அரசங்கம் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.(15)