சிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றய 11 ஆவது அமர்வுடன் நிறைவு பெற்றுள்ளது.இந்தப் பட்டமளிப்பு வைபவத்தைத் தொடர்ந்து நேற்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இசை மற்றும் நடனத்துறைகள் இணைந்து வழங்கும் கலாசார நிகழ்வுகள் மாலை 5.30மணி தொடக்கம் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் மூன்று நாள்களில் 11 அமர்வுகளாக இடம்பெற்ற இத்தப் பட்டமளிப்பு விழாவில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம் மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்ட பின்படிப்பு பட்டதாரிகளுக்கும், 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பட்டமளிப்பு வைபவத்தின் ஒரு பாகமாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர்.பொன் இராமநாதன் நினைவுப் பேருரை இம்மாதம் 12ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை 13ம் திகதி பி.ப 3.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளன.(15)