தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுவிட்டதாக மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுவிட்டதால். அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.தொடரும் ஊரடங்கால் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டிணி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.
அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகபவும் அவர்கள் தெரிவித்தார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இது குறித்த தகவல் வெளியிட்டுள்ள மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.5000 ரூபா கொடுப்பனவு ஒருமுறை மாத்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்திற்கு மேலதிகமாக எமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், மேலும் 14 நாட்கள் முடக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த சம்பளத்திற்காவும், கூலித் தொழில்களையும் முன்னெடுக்கும் தமக்கு 5,000 ரூபாவில் ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.தாம் நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணம் வரை தம்மை எந்தவொரு அதிகாரியும் பார்வையிட வரவில்லை – ஆனால் முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தின் பின்னரே இன்று வருகை தந்துள்ளார் எனவும்.தமக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத் தர அதிகாரிகள் முன்வர வேண்டுமென குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15)