செய்திகள்

திரைப்படமாக மாறும் தாய்லாந்து குகை சம்பவம்

சிறுவர்கள் சிக்கித்தவித்த தாய்லாந்து தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின் தைரியமான மீட்பு பணிகளை சம்பவங்களாக கொண்டு திரைப்படமாகவும் தயாரிக்க நிறுவனமொன்று தயாராகியுள்ளது.
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
17 நாட்களாக குகையில் சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த தாம் லுவாங் குகை மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளதாக சிறுவர்களை மீட்ட மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்தார்.
மீட்பு பணியின்போது பயன்படுத்தப்பட்ட பல நவீன கருவிகள், பிரத்யேக ஆடைகள் போன்றவை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாறும் பட்சத்தில் தாய்லாந்து நாட்டின் சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், சிறுவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது முதல் பத்திரமாக மீட்கப்பட்டது வரையிலான திரில் தருணங்களை திரைப்படமாக எடுக்க உள்ளதாக பியூர் ப்ளிக்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. -(3)