செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் நடைபெற்ற ஒன்றுகூடல்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கு நீதியை வலியுறுத்தும் வகையில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை ஒன்றுகூடல் ஒன்று லண்டனில் நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடலை பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் மக்களுக்கான சர்வகட்சி பாராளுமன்ற குழுவும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஒன்றுகூடலுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் எதிர்க்கட்சி தலைவர் எட் மில்பாண்டும் அனுப்பியிருந்த செய்திகளில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஐ. நா. விசாரணையின் அவசியத்தை மீள வலியுறுத்தியிருந்தனர். இந்த செய்திகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இந்த ஒன்றுகூடல் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை சில மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் விபரம் வருமாறு.

மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 29) இடம்பெற்றது.

இச் சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire . பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.John Mann Labour MP . இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது கடந்த காலங்களில் அதிகரித்திருந்தது என குறிப்பிட்ட அவர், இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் சர்வதேச நாடுகள் இந்த விசாரணையை அக்கறையுடன் நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் ஆதரவை திரட்டும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் தனது ஆதரவை வெளிப்படுத்திய Wales ஒக்மோரே தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.Huw Irranca (Shadow Minister Environment, Food and Rural Affairs) 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்தில் மனுவொன்றை கையளித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதோடு இவ்விசாரணைகள் துரிதமாக இடம்பெற பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளிவிவகார செயலர் ஆகியோர் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர் பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த மனு இவ்விசாரணைகளில் மேலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வழியமைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹவ் இரான்சா டேவிஸ், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 [youtube url=”https://www.youtube.com/watch?v=TE3AHL-R-3s&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=UUJunXzx2mE&feature=youtu.be” width=”500″ height=”300″]