ஜனாதிபதி மைத்திரி எமக்கு அநீதியிழைத்துவிட்டார்: ஹக்கீம் குற்றச்சாட்டு
சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த போதிலும் எமது ஆலோசனைகளை நிராகரித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதன் மூலம் அவர் எமக்கு அநீதியிழைத்துவிட்டார் என்று அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் குற்றம் சுமத்தினார்.
அமைச்சரவையில் எமது குரல்கள் அடக்கப்படுகின்றன. புதிய தேர்தல் முறை விடயத்தில் சர்வாதிகாரமும் தான் தோன்றித்தனமான போக்குமே கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது கட்சிகளை பற்றி சிந்திக்கின்றனரே தவிர சிறிய, சிறுபான்மை கட்சிகளைப் பற்றி சிந்திக்கவில்லை. இதேநேரம் புதிய தேர்தல் முறையை நியாயப்படுத்துவதற்கும் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் குறிப்பாக என்னையும் விமர்சிப்பதற்கு சில இலத்திரனியல் ஊடகங்கள் குத்தகைக்கு அமர்த்தப்பட்டது போன்று செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பிரதமரினது கையாளாக நான் செயற்படுவதாக விமர்சிக்கின்றனர். குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு செயற்படுவதற்கான தேவை எனக்கில்லை. அவர் மீதும் எனது விமர்சனம் இருக்கிறது. இவ்விடையத்தில் அவரது நோக்கம் வேறு எனது நிலைப்பாடு வேறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில்:
“புதிய தேர்தல் முறைமை என்றதான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சிறிய சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ச்சியாக தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் நேற்றையதினம் (நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை) தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஜனநாயக தேசியக்கூட்டணியின் அனுரகுமார திசாநாயக்க ஆகிய உறுப்பினர்கள் முன்வைத்திருந்தனர்.
அனுரகுமார திசாநாயக்க எம்பி தனது உரையின்போது மேற்படி 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான அமைச்சரவை உபகுழுவை விமர்சித்த அவர் அக்குழுவின் செயற்பாடுகளை “சமையலறை சர்வாதிகாரம்” என்று விளித்திருந்தார் இதனை மறுப்பதிற்கில்லை.
சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு 20 வது திருத்தம் எந்தவகையிலும் பாதிப்பாக அமையாது என்றும் சிறுபான்மை மக்களுக்கு புதிய தேர்தல் முறைமையில் அநீதியிழைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
ஆனாலும் சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் ஆலோசனைகள் உள்வாங்கப்படவில்லை. எமது நிலைப்பாடுகளை பரீசிலிக்கவும் இல்லை. எனினும் எமது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் இடது சாரிகள் ஏற்றுக்கொண்டதை போன்று மாதுலுவாவே சோபித்த தேரரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நான் அமைச்சரவையில் இருப்பதால் பிரதமரின் கையாளாக செயற்படுவதாக என்மீது குற்றம் சுமத்தி விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் அவ்வாறு பிரதமரின் கையாளாக செயற்படவேண்டிய தேவை எனக்கில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கு வேறு எமது நிலைப்பாடு வேறு. அவரது நகர்வுகள் குறித்து நான் அறிந்து வைத்திருக்கிறேன். அத்துடன் அவர் மீதும் எனக்கு விமர்சனம் உள்ளது. பிரதமரைப் பொறுத்தவரையில் அவருக்கு அவரது கட்சியின் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதே பிரதானமானதாகும். அதேபோன்று தான் ஜனாதிபதியும் செயற்பட்டு வருகிறார்.
நாட்டின் ஏழு மாகாணஙகளில் இருந்து போதுமான ஆசனங்களை பெற்று அடுத்த ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதே இவர்களின் பிரதான இலக்காக இருக்கின்றது. இவ்வாறு சிந்திப்பவர்களுக்கு வடக்கு கிழக்கு மக்கள் குறித்தோ சிறிய சிறுபான்மைக் கட்சிகள் குறித்தோ சிந்தனையில்லை.
சிறிய சிறுபான்மைக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைப்பற்றி ஆராய்வதற்கு தயாரில்லாத நிலைமை காணப்பட்டது. இது வரையிலான காலப்பகுதிகளில் கொண்டு வரப்பட்ட தேர்தல் மாற்றங்களின்போது தற்போது மாதிரியான சர்வாதிகாரப்போக்கு கடைப்பிடிக்கப்பட்டது கிடையாது.
இரட்டைவாக்குச் சீட்டு முறைமை உள்ளிட்ட எமது யோசனைகளை சகல தரப்பினருடனும் கலந்து பேசி அதன்பின்னர் வர்த்தமானியில் அறிவிக்க முடியும் என்ற யோசனையை நாம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தோம். ஆனால் அது ஏற்கப்படவில்லை. சிறிய சிறுபான்மைக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் அநீதியிழைக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி கூறியிருந்த போதிலும் மேற்படி 20ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார்.
எனவே எமது ஆலோசனைகளை பெறாது பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படவேண்டும். ஏனெனில் இத்திருத்தத்தின் மீது எமக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது. இதேபோன்று தான் 19ஆவது திருத்ததிலும் எமது யோசனைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய முறை தேர்தலானது அர்த்தமற்றதாகும்.
1. இப்புதிய முறை தேர்தலானது வாக்களிப்பவர்களுக்கும் விளக்கமில்லாதுள்ளது. அதேபோன்று சட்ட வல்லுனர்களும் விளங்காதுள்ளது. வாக்காளன் என்பவன் தான் அளிக்கும் வாக்கு தொடர்பில் தெளிவுபெற்றிருப்பது மிகவும் அவசியமாகும். இதன் பெறுபேறுகள் எப்படியானதாக இருக்கும் என்று தெரியாது. அவ்வாறான தேர்தல் முறைமையொன்று இவ்வாறு அவசர அவசரமாக கொண்டு வருவதற்கான தேவை என்ன என்பதே எமது கேள்வியாகும் என்றார்.