தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையை நிறைவு செய்ய இரு மாத அவகாசம்: நீதிமன்றம் உத்தரவு
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த விசாரணைகளை நிறைவுசெய்ய இரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.
றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படு கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் குறித்த கால அவகாசத்தை வழங்கி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
நேற்றைய தினம் இது தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவு தமது விசாரணைகளின் மேலதிக அறிக்கை ஒன்றினை மன்றுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாரஹேன்பிட்டி மற்றும் கிருலப்பனை பகுதிகளில் இருந்து பெறப்பட்ட இந்த படு கொலைகளுடன் தொடர்புடைய சீ.சி.ரி.வி. காணொளிகள் அடங்கிய இறுவட்டினை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நிறுவனத்துக்கு அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பிலான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. மிக விரைவில் இவை ஆய்வுகளுக்கு அனுப்பப்படும்.
அத்துடன் நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல்கள் அலுவலகத்தின் சீ.சி.ரி.வி.காட்சிகளை புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அந்த பதிவுகள் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி டக்ளஸ் தேவானந்தாவின் பார்க் வீதி, இலக்கம் 121, கொழும்பு – 5 என்ற முகவரியில் உள்ள அரசியல் அலுவலகத்தின் 2012.05.16 ஆம் திகதிக்குரிய சீ.சி.ரி.வி. பதிவுகள் அடங்கிய’ வன்தட்டை’ நாம் ஆராய்ந்தோம். அதன் போது வஸீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்றதாக நம்பப்படும் காலப்பகுதியில் அந்த அலுவலகத்தில் சீ.சி.ரி.வி. வசதிகள் எதுவும் இருக்கவில்லை என்பது தெரியவந்தது.’ என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் மன்றில் ஆஜராகியிருந்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க தெரிவிக்கையில்:
“இது ஒரு நீண்ட நுணுக்கமான விசாரணையாகும். எனவே இந்த விசாரணைகளை நாம் நிறைவு செய்ய எமக்கு இன்னும் இரு மாத கால அவகாசம் வேண்டும். இரு மாதங்களில் இந்த விசாரணையின் முழுமையான அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பிக்க முடியும்.’ என நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக ஆய்வுக்காக பெறப்பட்ட வஸீம் தாஜுதீனின் உடல் உறுப்புக்கள் சில மாயமாகியுள்ளமை தொடர்பில் இலங்கை வைத்திய சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் அந்த சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் மன்றுக்கு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதன் போது குறித்த விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என தெரிவித்த அந்த சட்டத்தரணி விசாரணைகள் நிறைவு பெற்றதும் அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
முன் வைக்கப்பட்ட வாதங்களை கருத் தில் கொண்ட நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளுக்காக கோரிய இரு மாத கால அவகாசத்தை வழங்கியதுடன், விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவும் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து இது குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிவான் அறிவித்தார்.
வெள்ளவத்தை, முருகன் வீதியை வதிவிடமாகக் கொண்ட வஸீம் தாஜுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலிகா மைதானம் அருகே மதில் ஒன்றுடன் மோதியவாறு எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
R-06