நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள்
நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பமாகி ன்றன. காலை நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற் குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கலந்து கொள்வதோடு சிறப்பு விருந்தினராக அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் கலந்து கொள்கின்றார்.
வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் நடைபெறவுள்ளன.
இந்த வருடம் ஏனைய வருடங்களைவிட அதிகமான உல்லாச பிரயாணிகள் வருகை தருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே தெரிவிக்கின்றார். வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் குறிப்பிடுகின்றார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை உல்லாச பிரயாணிகளாக வருபவர்கள் நுவரெலியாவின் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
பொலிதீன் மற்றும் கழிவுப் பொருட்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் போடுமாறும் பாதைகளில் போடுவதன் மூலம் தண்டனைக்குட்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த வருடங்களைவிட இந்த வருடம் சூழல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் நகர முதல்வர் தெரிவிக்கின்றார்.