படை வீரர் தின நிகழ்வில் உள்நுழைய முயன்ற இராணுவ வீரரிடமிருந்து துப்பாக்கி ரவை மீட்பு
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் விதமாக இடம்பெற்ற இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள வந்த இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து 7.6 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை, கொட்டுவேகொட பிரதேசத்தில் சனத் ஜயசூரிய மைதானத்தில் 7 ஆவது நுழைவாயில் ஊடாக நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவரிடமிருந்தே இந்த துப்பாக்கி ரவை மீட்கப்பட்டதாகவும் குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாதாரண உடையில் வருகை தந்துள்ள குறித்த இராணுவ வீரர் மன்னார் 25 ஆவது கெமுனு ஹேவா பலகாய படைப் பிரிவில் சேவையாற்றுபவர் எனவும் விடுமுறையின் நிமித்தம் வீட்டுக்கு வந்திருந்தவர் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
தெய்யந்தர, பகல மெதகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த இராணுவ வீரர் உள் நுழைய முற்பட்ட போது நாரம்மலை பொலிஸ் நிலையத்திலிருந்து விஷேட கடமைக்காக அழைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி அவரைக் கைது செய்து மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த தக வல்கள் மேலும் தெரிவித்தன.