“பின்னோக்கி பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்” கவிதை நூல் வெளியிட்டு விழா
கவிஞர் தமிழ் உதயாவின் “பின்னோக்கி பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்” கவிதை நூல் வெளியிட்டு விழா லண்டன் ஈலிங் அம்மன் ஆலய மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பேராசிரியர் சபா.ஜெயராசா இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் வாழ்க்கையும் கவிதையும் பரவிச்செல்வதையும் இருதளக் கோலங்களாக இடம்பெறுகின்றன என்றும் புனைவு நிறைந்த கவிதைகள் என்று குறிப்பிட்டார்.
திருமதி சுபா சுதர்ஷன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். வரவேற்பு பரதத்தை லிவர்பூல் தமிழ் பாடசாலை பரத ஆசிரியை திருமதி தனுசிஜா யசோதரன் நிகழ்த்தினார்.
ஆலய பரிபாலன சபை தலைவர் திரு ரி யோகநாதன், திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் (நாடு கடந்த தமிழீழ அரசு விளையாட்டுத்துறை சமூகநலன் பிரதி அமைச்சர்) ஆகியோர் ஆசியுரை மற்றும் வாழ்த்துரையை நிகழ்த்தினர்.
பிஞ்சு மொழியால் செல்வி அக்சயா கருணாதனன் தமிழின் பெருமையை எடுத்துக்கூறி உரையாற்றினார்.
திரு இளையதம்பி தயானந்தா, திருமதி மாதவி சிவலீலன், கவிஞர் இளைய அப்துல்லா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.
நூலை வெளியிட்டு வவுனியூர் இரா உதயணன் சிறப்புரை ஆற்றினார். முதற்பிரதியை கவிஞர் தமிழ் உதயாவின் தந்தை திரு முருகேசு பசுபதி பெற்றுக் கொண்டார்.
கவிஞர் யமுனா ராஜேந்திரன் இந்த நூலின் மதிப்புரையை வழங்கினார்.
முடிவில் தமிழ் உதயா நெகிழ்ச்சியான ஏற்புரையை வழங்கினார். இந்த விழாவின் ஏற்பாடுகளை லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஒழுங்குசெய்திருந்தது. ஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தைசேர்ந்த சதீஷ் நிகழ்வை தொகுத்தளித்தார்.