செய்திகள்

‘பொய்யா விளக்கு திரைப்படத்தை’ இணையத்தில் பார்வையிடலாம்

ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்புப் போரின் பின்புலத்தில், அங்கே பணியாற்றிய மருத்துவரின் கதையினூடாக, இடம்பெற்ற அவலங்களின் முக்கிய நிகழ்வுகளை வெளிக்கொண்டு வரும் பொய்யா விளக்கு திரைப்படம் இப்போது இணையத்தினூடாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பதினைந்துக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை திரைப்பட விழாக்களில் வென்று, ஈழத்திரைப்படங்களின் தரத்தினை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற இந்தத் திரைப்படம் எங்கள் மக்களின் கதைகளை சர்வதேச பரப்பில் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற வெண்சங்கு கலைக்கூடத்தின் ஆர்வத்தினைத் திருப்தி செய்வதாக இருக்கிறது. இந்த முயற்சியினை வெற்றிகரமாக ஆக்குதல் எம் மக்களின் பொறுப்பாகும்.

ஒரு கொடூரப் போர் வீழ்த்திச் சென்ற எங்கள் மக்களின் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் தியாகங்களும், அவலங்களும் இன்னமும் இரத்தம் காயாத நினைவுகளோடு இருக்கின்றன. இவை சொல்லப்படல் வேண்டும். இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தலைமுறை இருக்கும் போதே, அந்தக் கதைகள் திரிபு படுத்தப்படாமல் உலகமெங்கும் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். பொய்யா விளக்கு என்ற இந்தத் திரைப்படம் இந்த நோக்கத்திற்கான ஒரு காத்திரமான முதற்படி. இதனையும் வரவேற்காது பின் நிற்போமானால், எமது கதைகளை எடுத்து வருகின்ற இப்படியான முயற்சிகள் இல்லாமலேயே போய்விடும்.

தட்டிக்கழிக்காமல் நாம் கைகொடுக்க வேண்டிய ஒரு முக்கியமான படைப்பு இது. எமது வருங்கால சந்ததிக்கும், தமிழரல்லாதோருக்கும் கற்பிதலுக்கான ஒரு மூலமாக இது இருக்கிறது.

www.thelampoftruch.com என்ற இணையத் தளத்தினூடாகக் கட்டணம் செலுத்தி பொய்யா விளக்கினைப் பார்க்கலாம்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுப் பார்த்தவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ‘மண்ணை இழந்தோம்’ என்ற பாடல் வரும் வைகாசி 28ம் திகதி இணையத்தில் வெளியிடப்படுகிறது என்பதனை அனைவருக்கும் அறிவிக்கிறோம். இதற்கான அறிவித்தல்கள் எதிர்வரும் நாட்களில் சமூக வலைத்தளங்களின் ஊடாக அறியத்தரப்படும்.