மட்டக்களப்பில் புகைத்தல், மதுஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் (படங்கள்)
சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு,புளியந்தீவு சமுர்த்தி சங்கத்தினால் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் கவன ஈர்ப்பும் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள்,மாணவர்கள் இணைந்து நடாத்திய மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மதுபாவனையில் இலங்கையில் முதல் இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.