மட்டு. தும்பங்கேணி விபத்தில் 32பேர் படுகாயம்! புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் (படங்கள்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தாண்டு பொருட் கொள்வனவுக்கு மக்கள் பயணித்துக் கொண்டிருந்த பஸ் குடை சாய்ந்ததில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.00 மணியளவில் வாழைக்காலை பிரதேசத்தில் இருந்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தும்பங்கேணி வீதியால் பஸ் வந்து கொண்டிருந்த போது பஸ்சின் டயரில் காற்று வெளியேறிய நிலையில் தடம்புரண்டு வீதியில் மருங்கில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அதில் 50 பேர் பயணம் செய்துள்ளதுடன் அவற்றில் 32 பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11பேர் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ள நிலையில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெலகெதர தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.