மட்டு நகர் பாடசாலைகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு தயாரிக்கு இடங்கள்,நீர் விநியோக பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் சம்சா உட்கொண்ட மாணவி ஒருவர் சுகவீனமுற்றதை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சுகாதார பரிசோகர் க.தேவநேசன் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையிலும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள்,உணவு தயாரிக்கும் பகுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலையில் கடமையில் ஈடுபடுவோர் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு தொடர்பிலும் பாடசாலையின் சூழல் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிற்றுண்டிசாலைகளை நடாத்துவோர் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
முறையான சுகாதார நடவடிக்கைகளை பேணாத பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு அவர்களது சிற்றுண்டிச்சாலையினை புனரமைப்பதற்கு இருவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.