மீண்டும் மட்டு நகரில் பேடன் பவலின் உருவச் சிலை
ஐந்து வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் இருந்து அகற்றப்பட்ட சாரணர் தந்தை பேடன் பவலின் உருவச்சிலை மீண்டும் மட்டக்களப்பு நகரில் உள்ள திருநீற்றுக்கேணி பூங்காவில் நிறுவப்பட்டது.
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபர் பேடன் பவலின் 158வது பிறந்த தினத்தினையொட்டி மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் இந்த சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் .பி.ஆனந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பொறியியலாளர் ரி.தேவதீபன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் 80வது ஆண்டு நிறைவும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபர் பேடன் பவலின் 158வது பிறந்த தினத்தினையும் ஒட்டி இந்த சிலை மீண்டும் திறந்துவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஊடக உதவி ஆணையாளர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.
இதன்போது அதிதிகளினால் சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் .பி.ஆனந்தராஜாவினால் சிலைக்கு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள சாரண மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் திருநீற்றுக்கேணி பூங்காவில் இருந்து அரசினர் ஆசிரியர் கலாசாலை வரையில் ஊர்வலமும் நடைபெற்றது.
1998 ஆம்ஆண்டு முதன்முறையாக மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சிலையானது 2010ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட நிலையில் வீதி புனரமைப்பு காரணமாக அகற்றப்பட்டு மீண்டும் ஸ்தாபிக்கப்படாமல் இருந்தது.