யானை சின்னத்தில் களமிறங்கும் மலையக மக்கள் முன்னணி: இராதாகிருஷ்னன் அறிவிப்பு
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும். இதனை மத்திய குழு தீர்மானித்துள்ளது.முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் தன்னையும், பதுளையில் அரவிந்தகுமாரையும் போட்டியிட மத்திய குழு பரிந்துரைத்துள்ளது என்று முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளருமான ஏ.லோறன்ஸ், கட்சியின் உபதலைவர் விஜயசந்திரன், நிதி செயலாளர் அ.அரவிந்தகுமார், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பிரசாத் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இராதாகிருஷ்ணன் தொடர்ந்து தெரிவிக்கையில்..
கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தி சந்திரசேகருடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முழு பங்களிப்பினை அவர் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து வலுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஜக்கிய தேசிய கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிடும். இதனை மத்திய குழு தீர்மானித்துள்ளது. முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் தன்னையும், பதுளையில் அரவிந்தகுமாரையும் போட்டியிட மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
அத்தோடு வடக்கு கிழக்கில் உள்ள மலையகத்தை சார்ந்த இரண்டு பேரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்து இம்முறை பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் வன்னி மாவட்டத்திலும் போட்டியிடவைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம் எடுத்துள்ளது. அது தொடர்பான பேச்சுவாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடைபெற்று வருகிறது. வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அவர்களின் வேண்டுகோள்க்கிணங்கவே இந்த தீர்மானம் எடுத்துள்ளோம்.
100 நாள் வேலைத்திட்டத்தில் மலையக பகுதியில் உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்மைப்பு அமைச்சினால் வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மேலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போவதாகவும் பிரதமரின் விசேட வேலைத்திட்டத்தினூடாக மலையக பகுதியில் 25 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப் பட்டுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்தார்.