யாழ். ஆழியவளை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (படங்கள்)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற்கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துள்ளன.
30 குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை ஆழியவளை பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச அமைப்பாளர் தங்கராசா காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது.
சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.
மக்களது தேவை அடிப்படையில் நல்லின ஆடுகள், தையல் இயந்திரங்கள், வியாபார பொருட்கள், கோழி வளர்ப்பிற்கான உதவிகள், கடற்தொழில் உபகரணங்கள் என பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திட்ட இணைப்பாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.