செய்திகள்

யாழ். – கொழும்பு இடையே சரக்கு ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக ரயில் சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் யாழ். கொழும்புக்கிடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ். வணிகர் கழக பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,

யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் இதுவரை காலமும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர்.

துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் லொறிகளை பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்து, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்காளாகியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தகர்களுக்கு போக்குவரத்துக்காக சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு ரயில்கள் தேவைப்படுவதால் அதற்கான செலவை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர்.

எனவே இப்பிரச்சினையின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை ரயில்கள் மூலம் சலுகை விலையில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

-(3)