அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த திருவிழா
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான 47ஆம் வருட தேர்த்திருவிழா ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ.இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நாளை ( 24.04.2015) முதல் 29.04.2015 திகதி வரை தினமும் விசேட பூஜை, ஸ்தம்ப பூஜை, வசந்தமண்டப பூஜை தொடர்ந்து உள்வீதி வலம் நடைபெற்று அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும். அத்தோடு 27.04.2015 அன்று மாம்பழத் திருவிழா நடைபெறுவதோடு 29.04.2015 அன்று மாலை 7 மணிக்கு கற்பூரச்சட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய திருக்கோயிலிலிருந்து ஆரம்பமாகும் என்பது குறிப்பிடதக்கது.
30.04.2015 அன்று வியாழக்கிழமை சிங்கமலையடிவாரத்திலிருந்து புனித கங்கை நீர், டிக்கோயா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து காவடி, பறவைக்காவடியும் மாலை வேட்டைத் திருவிழாவும் இடம்பெறும்.
01.05.2015 அன்று வெள்ளிக்கிழமை திருமூர்த்திகள் தேவஸ்தான உள்வீதி வலம் வந்து பஞ்சரதபவனி இடம்பெறும். தொடர்ந்து 02.05.2015 அன்று இரதாரோஹணத்துடன் தேவஸ்தான அடிவாரத்தை வந்தடைந்ததும் பச்சை சார்த்தப்பட்டு பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
03.05.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பால்குடபவனி, சங்காபிஷேகம், தீர்த்தோற்சவம் நடைபெற்று கொடியிறக்கம் இடம்பெறும்.
04.05.2015 அன்று திங்கட்கிழமை திருக்கல்யாணம், பூங்காவனத்திருவிழா நடைபெறும். 05.05.2015 அன்று காவல்தெய்வமாகிய வைரவர் பெருமானுக்கு ருத்ரா அபிஷேகம், வைரவர் மடை, விசேட பூஜை, விபூதி பிரசாதம் வழங்கப்படும்.











