அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும்
யதீந்திரா
தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், சில விடயங்களை பகிரங்கமாக கூற முடியாமையை விளங்கிக்கொள்ளலாம், ஆனால், கருத்துருவாக்கங்களை செய்யும் அரசியல் சிந்தனையாளர், பத்திரிகையாளர் மற்றும் சமூகமட்டத்தில் மதிக்கப்படும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் மதில் மேல் பூனைகளாக இருப்பதுதான் துரதிஸ்வடசமானது. இளைய தலைமுறையை வழிநடத்துவதில் இவர்களுக்கே தலையாய பொறுப்புண்டு. ஆனால் அவர்களோ தொடர்ந்தும் நடைமுறைச் சாத்தியமற்ற கதைகளையே பெருமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஈழத் தமிழ் தலைமைகளுக்கு போதுமான அரசியல் அனுபமுண்டு. இந்த அனுபவத்திலிருந்து சிந்தித்தாலே போதுமானது. ஆனால் அதற்கு பலரும் தயாராக இல்லை. இலங்கை தமிழரசு கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஸ்டிக் கட்சி. அதாவது, சமஸ்டியை அடைவதுதான் தமிழரசு கட்சியின் இலக்கு. இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த 74 வருடங்களாக தமிழ் அரசியல் கட்சிகள் சமஸ்டி தொடர்பில் பேசிவருகின்றன. ஆனால் அடைய முடிந்ததா? கடந்த 74 வருடங்களில் ஏராளமான அரசியல் ஆளுமைகளையும், அவர்களின் அரசியல் நகர்வுகளையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆனாலும் எதனையும் தமிழ் கட்சிகளால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த 74 வருட கால அரசியல் வரலாற்றில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற மாகாண சபை ஒன்றுதான் நீடித்து நிலைத்திருக்கின்றது.
அன்றைய சூழலில் ஆயுத விடுதலை இயக்கங்களில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஓன்றுதான், மாகாண சபையை பொறுப்பேற்று நடத்திக் கொண்டு, அதிலிருந்து முன்னேற்றலாமென்னும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்தியாவின் ஆதரவுடன் அதனை சாத்தியப்படுத்த முடியுமென்று அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் 1989இல், பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, நிலைமைகள் தலைகீழாகின. இந்தியாவை தமிழர் பிரச்சினையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளும் பிரேமதாசவும் உடன்பட்டுக் கொண்டதன் பின்புலத்தில், இந்தியா வெளியேற்றப்பட்டது. இந்தியாவின் வெளியேற்றம் என்பது, அன்றைய சூழலில் யதார்த்தபூர்வமான அணுகுமுறைகள் அனைத்துக்குமான முற்றுப்புள்ளியாகும்.
விடுதலைப் புலிகளின் நம்பிக்கை வேறொன்றாக இருந்தது. அதனை அடைய முடியுமென்று அவர்கள் நம்பினர். விடுதலைப் புலிகள் தாங்கள் நம்பிய ஒன்றுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கினர். அதன் மீது மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒரு விடயத்திற்காக உயிரை கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மக்கள் இயல்பாகவே அதன் பக்கமாகத்தான் இருப்பர். உயிரைகொடுப்பதற்கு சித்தமாக இருப்பவர்கள் கூறுவதைத்தான் சரியென்று நம்புவர். அதுதான் அன்றைய சூழலில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு கூறிய உண்மைகளை அன்று செவிமடுக்க எவரும் தயாராக இருக்கவில்லை.
நான் ஒரு முறை வன்னியில் நின்று கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்னிடம் இவ்வாறு கூறினார். அதாவது, அண்ணன், நாங்கள் இன்றைக்கும் பலமாக இருக்கின்றோம் என்றால், அதற்கு எங்களுடைய தலைவர்தான் காரணம். அவருடைய முடிவுகள் பிழையென்றால் நாங்கள் அழிந்தல்லவா போயிருப்பம் என்றார் அந்த உறுப்பினர். நான் அதனை சரியென்றே ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் அவர் கூறியது தர்க்கரீதியில் சரியாகத்தான் இருந்தது. ஏனெனில் அன்று விடுதலைப் புலிகள் பலமாக இருந்தனர். ஆனால் அந்த தர்க்கத்தை முன்வைத்து இன்று வாதிட முடியுமா? 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்புலத்தில், அதுவரையான நமது நம்பிக்கைகளும், அரசியல் புரிதல்களும், நிலைப்பாடுகளும் தோற்றுவிட்டன. இந்த பார்வையிலிருந்து சிந்தித்தால், இன்றைய சூழலில் மதில் மேல் பூனையாக இருக்க வேண்டியதில்லை. இன்றைய யதார்த்தங்களை நிமிர்ந்து எதிர்கொள்ள முடியும். ஆனால் பிரச்சினையோ இப்போதும் நம்மில் பலர், விடயங்களை கூனிக்குறுகியே எதிர்கொள்ள முற்படுகின்றனர். அரசியல் யதார்த்தங்களை கண்டு பயந்து நடுங்குகின்றனர். பலருக்கு சுயவிமர்சனம் என்னும் சொல்லை கேட்டவுடனே, கை உதறுகின்றது. நாங்கள் அனைத்திலும் சரியென்றால் பின்னர் எவ்வாறு இவ்வாறனதொரு கோவண நிலை ஏற்பட்டது?
அரசியல் என்பது சூழ்நிலைகளை கையாளும் கலையாகும். சூழ்நிலைகள் நமது விருப்பங்களுக்கு அமைவாக ஓரு போதும் இருக்கப் போவதில்லை. அதே போன்று அனைத்து விடயங்களிலும் நம்மோடு ஒத்துப்போபவர்கள், நமக்கு முன்னால் இருக்கப் போவதில்லை. ஆனால் நாமோ, நமக்கு விரும்பமில்லாத சூழலுடனும், பல சந்தர்பங்களில் நமக்கு விருப்பமில்லாத நபர்களுடனுமே பணியாற்ற வேண்டியிருக்கும். அரசியலில் இந்த நிலைமை எப்போதுமே தவிர்க்க முடியாதது. இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டுரையாளர், எப்போதும் தந்திரங்களை முதன்மைப்படுத்தும் எழுத்தாளராக இருக்கின்றார்.
ஏனெனில் அரசியல் என்பது முற்றிலும் துறந்தவர்களின் பயணமல்ல. முற்றிலும் துறந்தவர்களுக்கே அரசியல் இருக்கும் காலம் இது. எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கான இலாபங்களை அடைவதற்கான கடைகளை திறக்கும் நோக்குடன்தான், நமது சூழலுக்குள் கால் வைப்பர். அவர்களுக்கான இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில்தான், அனைத்தையும் முன்னெடுப்பர். இது ஒரு அரசியல் யதார்த்தம். இந்த இடத்தில் ஒரு கேள்வி முன்வைக்கப்படலாம். அப்படியானால் அவர்களுடன் நாங்கள் எதற்காக பேச வேண்டும்? நாங்கள் சுயாதீனமாக செயற்படலாம்தானே. இது பற்றி கவிதையெழுதலாம். அந்தளவுதான் இதன் பெறுமதி;. இந்த உலக அரசியல் ஒழுங்கில் சுயாதீனம் என்று எதுவுமில்லை. இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கி;ன்றது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயி;ன், ஏனைய நாடுகளிடம்தான் கையேந்த வேண்டும். அவ்வாறு உதவுகின்ற நாடுகள் தங்களுக்கான நலன்களையும் நிறுத்துப் பார்க்க முற்படும். நேரடியாவோ அல்லது மறைமுகமாவோ! பொருளாதார மீட்சில் சுயாதீனம் பற்றி பேசமுடியுமா?
அரசியலும் அப்படித்தான். உண்மையில் அரசியல்தான் அனைத்தினதும் தாய். அரசியலில் எவரும் சுயாதீனமாக இருக்க முடியாது. தமிழ் ஆயுத இயக்கங்கள் எப்போது, தங்களின் இராணுவ ஆற்றலை பெருக்கிக்கொள்ள வெளியாரிடம் உதவிகளை பெற்றார்களோ, அப்போதே அன்னிய தலையீடுகள், நமது அரசியலுக்குள் நுழைந்துவிட்டன. அதனை தடுக்கவும் முடியாது. ஆனால் இவ்வாறான சூழலை எவ்வாறு நமக்கு அதிகம் சேதமில்லாமல் சமாளிக்க முடியுமென்பதுதான் கேள்வி. அவ்வாறு சமாளிப்பதில்தான் நமது கெட்டித்தனம் தங்கியிருக்கின்றது.

இந்தியாவின் நலன்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் கூட, கணிசமான அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில், இந்தியா, உறுதியான ஈடுபாட்டை காண்பித்தது. அதற்காக தமிழர்கள் கேட்கும் அனைத்தையும் இந்தியா பெற்றுக்கொடுக்க முடியாது. இப்போதும் நம்மில் சிலர், இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை அழுத்தக் கூடாது என்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களிடம் இந்தியா தொடர்பில் தெளிவான பார்வையில்லை அல்லது அதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டவாறு இந்தியா ஈழத் தமிழர்களின் வேலையாள் அல்ல. நீங்கள் வா என்றால் வருவதற்கும் – போ என்றால் போவதற்கும். இந்தியா ஒரு பிராந்திய சக்தி. ஒரு பக்தன் கடவுளிடமிருந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற பக்குவத்துடன்தான், பலம்பொருந்திய நாடுகளை அணுக வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். நிலைமைகள் மாறும் வரையில் காத்திருக்க வேண்டும். வாய்ப்புக்கள் வரும்போது, அதனை பயன்படுத்திக் கொள்வதற்கான தயார்படுத்தல்களோடு இருக்க வேண்டும். விரும்பும் ஒன்று கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்ப வேண்டும். இதுதான் அரசியிலுக்கான சூத்திரம். இந்தச் சூத்திரத்தை புரிந்து கொண்டால் ஒரு பொல்லாப்புமில்லை.
இலங்கையை மையப்படுத்தி வெளியாரின் தலையீடுகளின் எல்லையை எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும்? உண்மையில், இலங்கையை மையப்படுத்திய அனைத்து வெளித் தலையீடுகளும், இலங்கை அரசை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. ஹிட்லரின் நாசி பிரச்சார அமைச்சர் கூறியது போன்று, ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால், அது உண்மையென்று நம்பப்படும் என்பது போல், நம்மில் சிலரும் சில விடயங்களை தவறாக முன்வைக்கின்றனர். அதனை தொடர்ந்தும் கூறுகின்ற போது, அதனை மக்களும் உண்மையென்று எண்ணிக்கொள்ளலாம். இலங்கையை மையப்படுத்தி வெளிநாடுகளின் நகர்வுகள் அனைத்துமே அரசை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது. நிச்சயமாக தமிழ் மக்களை கருத்தில் கொண்டு அவர்களது அணுகுமுறைகள் இருக்கவில்லை. இந்தியாவின அணுகுமுறையில் மட்டுமே தமிழ் மக்களுக்கு பிரத்தியேக இடமுண்டு. வெளியாரின் முதலாவது கரிசனை சிங்கள பெரும்பாண்மையினை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது. ஏனெனில் சிங்கள பெரும்பாண்மையை விரோதித்துக் கொண்டால், அவர்களது நலன்களை இலங்கைத் தீவில் முன்னெடு;ப்பது கடினமாகும். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையை ஒரு நட்புநாடாக கருதும் அணுகுமுறையே அனைவரிடமும் இருக்கின்றது. ஒரு நட்பு நாட்டின் மீது ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. பாக்கிஸ்தானை உடைத்தது போல், இலங்கைத் தீவை உடைப்பதற்கு இ;ந்தியா உதவுமென்னும் பார்வையொன்று, ஒரு காலத்தில் இருந்தது. செல்வநாயகம் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்தமைக்கு பின்னாலும் அப்படியொரு காரணம் இருப்பதாகவும் ஒரு பார்வையுண்டு. செல்வநாயகம் தொடர்பான ஏ.ஜே.வில்சன் எழுதிய சுயசரிதையில் கூறப்பட்டிருக்கும் சில தகவல்கள் அவ்வாறான பார்வைக்கு வலுச் சேர்க்கின்றது. ஆனால் பாக்கிஸ்தான் வேறு இலங்கை வேறு என்பதுதான் உண்மை. இலங்கைத் தீவின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கமே அன்றிருந்து. அதுவே இன்றுவரையில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் நேரடியான தலையீட்டுக் காலத்தில், இந்திராகாந்தியின் ஆலோசகராகவும் இலங்கை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியாகவும் இருந்த, பர்த்தசாரதி, அனைத்து இயக்கங்களி;ன் தலைவர்களுக்கும் ஒரு விடயத்தை தெளிவாக கூறியிருந்தார். அதாவது, இந்தியா ஒரு போதும் தனிநாட்டை ஆதரிக்காது அத்தோடு அதனை அனுமதிக்கவும் மாட்டாது.
உள் தகவல்களின் படி, பார்த்தசாரதி முதல் முதலாக கொழும்பிற்கு வருகின்ற போது, சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வு யோசனையுடன்தான் வந்திருக்கின்றார் ஆனால் கொழும்பில் நின்ற நாட்களில், அவரது பார்வை முற்றிலும் மாறிவிட்டது. சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ராஜதந்திரிகள், புத்திஜீவிகள் பலரோடு பேசியதைத் தொடர்ந்து, சமஸ்டித் தீர்வை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்களை அவர் புரிந்துகொண்டார். இதனைத் தொடர்ந்துதான், இந்தியாவின் மானில முறைமையிலான தீர்வை முன்வைக்கும் திட்டத்தை இந்தியா கையிலெடுத்தது.
அந்த அடிப்படையில் வந்ததுதான் இன்றுவரையில், இலங்கையில் நிலைத்து நிற்கின்றது. நமக்குள் பேசுபொருளாக இருக்கின்றது. நமக்குள் எவ்வாறான விவாதங்கள் இருந்தாலும் கூட, அதனை தாண்டி நம்மால் பயணிக்க முடியவில்லையென்பதுதான் உண்மையானது. இந்த உண்மையை உணர்ந்து செயற்பட்டால் மட்டுமே ஏழை தமிழ் மக்களுக்கு விமோசனமுண்டு. மாகாண சபையை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை, ஆனால், அதனைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்துவற்கே இந்தியாவின், மேற்குலகத்தின் அழுத்தங்கள் தேவைப்படுகின்றது. இதுதான் இலங்கைத் தீவின் அரசியல் யதார்த்தம். சில யதார்த்தங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால், அவைகள் யதார்த்தம் என்பதை நம்மால் புறக்கணிக்க முடியாதது என்பதே, அந்த யதார்தத்தின் யதார்த்தமாகும்.


