இலங்கை விவகாரத்தில் மேலும் தளர்வடையும் சர்வதேச சமூக நிலைப்பாடுகள்
வீரகத்தி தனபாலசிங்கம்
போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்படவேண்டியிருக்கும் நீதி விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டவர்களின் பங்கேற்பை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் தனது செயலை இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறது?
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு இருக்கின்ற பொறுப்புக்கூறல் கடப்பாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களில் அக்கறை கொண்டவர்களிடம் இருந்து எழுந்த கேள்வி இது. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சகல தீர்மானங்களையும் நிரா கரித்த ராஜபக் ஷ அர சாங்கம் பதவியில் தொடர்ந்தும் இருந்திருந்தால் இத்தகையதொரு கேள்வி எழுந்திருக்காது. பொறுப்புக்கூறல் செயன்முறைகள் தொடர்பில் அந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு ஒருபோதுமே தயாராயிருந்ததில்லை.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தற்போதைய தேசிய ஐக்கிய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கின்ற ஒரு அணுகுமுறையை கடைப்பிடிப்பது மாத்திரமல்ல, 2015 அக்டோபரில் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணையையும் வழங்கியிருந்தது. அதன் காரணத்தினாலேயே இந்தக் கேள்வி முக்கியமான ஒன்றாக தெரிந்தது. ஆனால், கடந்த 18 மாதங்களாக அந்தத் தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பயனுறுதியுடைய எந்தச் செயன்முறையையும் முன்னெடுக்காமல் இருந்த காரணத்தால் தோன்றக்கூடியவை என்று எதிர்பார்க்கப்பட்ட எந்தப் பிரச்சினையையும் கையாளுவதில் அரசாங்கத்துக்கு எந்தச் சிக்கலுமே இல்லை என்ற சூழ்நிலையே இப்போது தோன்றியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமானதற்கு மறுநாள் பெப்ரவரி 28 வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார். போருக்குப் பின்னரான நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் பெரும் தடைகளையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்ற தங்கள் தரப்பு ‘நியாயத்தை’ சர்வதேச சமூகத்துச் சொல்வதே அவரின் உரையின் முக்கிய நோக்கமாக இருந்தது. 2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலான தாமதங்களுக்கு இலங்கையில் எதிரணி அரசியல் சக்திகளின் ‘ஜனரஞ்சகவாத அரசியலே’ (Populism) முக்கிய காரணம் என்று அவர் கூறினார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களின் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கின்ற முயற்சிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் தேசிய வாத உணர்வுகளைக் கிளறிவிடுகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ‘கூட்டு எதிரணியின்’ செயற்பாடுகளையே வெளியுறவு அமைச்சர் ஜனரஞ்சகவாத அரசியல் என்று குறிப்பிடுகிறார் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் இனப்பிரிவினையின் இரு பக்கங்களிலும் உள்ள தீவிரவாத சக்திகள் அரசாங்கத்தின் முன்னோக்கிய பயணத்துக்கு முட்டுக்கட்டைகளைப் போடுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர் ஜனரஞ்சகவாத அரசியல் என்பது இலங்கைக்கு மாத்திரம் பிரத்தியேகமான ஒன்றல்ல என்றும் குறிப்பிட்டார்.
‘மனித உரிமைகளின் அடிப்படைகளும் ஆதாரங்களும் உலகம் பூராகவும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் நான் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களில் பல ஜனரஞ்சகவாதத்தின் பெயரால் சவாலுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஜனரஞ்சக அரசியல்வாதிகள் அறியாமையிலிருந்தும் மடமையிலிருந்தும் நாரிழையை எடுத்து வலையை பின்னுகின்றார்கள். இத்தகைய பின்புலத்தில் மனித உரிமைகள் பேரவையின் பாத்திரம் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது’ என்று சமரவீர தனதுரையில் கூறினார். அதாவது, இலங்கையில் நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு எதிராக இருக்கின்ற ஜனரஞ்சகவாத அரசியல் என்பது இன்று உலகின் பல பாகங்களிலும் வியாபிக்கின்ற பொதுவான அரசியல் போக்கொன்றின் அங்கம் என்று அர்த்தப்படுத்த அவர் முயற்சித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக கடந்த வருடம் ஜூனில் பிரிட்டனில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தமை (Brexit), கறுப்பினத்தவர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர்களுக்கும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கும் எதிரான உணர்வுகளை கிளறிப் பிரசாரம் செய்த டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி ஆகியவற்றை தொடர்ந்து இன்று இந்த ஜனரஞ்சகவாத அரசியல் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. ஆனால், இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான உணர்வுகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கேனும் நிறைவுசெய்யக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்ற போக்கும் இந்த ஜனரஞ்சகவாத அரசியலுக்குள் அடங்குமா என்ற கேள்வி இயல்பாவே எழுகிறது. ஏனென்றால், சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான அரசியல் இலங்கையில் ‘பாரம்பரியமான’ ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அது ஒரு புதிய தோற்றப்பாடேயல்ல. உலகளாவிய ஒரு போக்காக இப்போது அடையாளப்படுத்தப்படுகின்ற ஜனரஞ்சகவாத அரசியலுக்குள் தனது அரசாங்கத்தின் இயலாமைகளையும் தவறுகளையும் மூடிமறைத்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் அனுதாபத்தை தேட மங்கள சமரவீர மேற்கொண்ட பிரயத்தனமாகவே அவரின் ஜெனீவா உரையை வர்ணிக்கவேண்டியிருக்கிறது. அன்றாட நடைமுறை யதார்த்த அரசியலில் (Real Politik) எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் அவ்வப்போது சுற்றுவழிகளை நாடவேண்டியிருந்திருக்கலாம். ஆனால், பயண இலக்கு ஒன்றாகவே இருக்கிறது. நிலைமாறு கால நீதிச் செயன்முறைகள் ( Transitional Justice) மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறைந்துவிடவில்லை என்றும் அவர் கூறுவதைக் காண முடிந்தது.
வெளியுறவு அமைச்சர் ஜெனீவாவில் உரையாற்றி இரு தினங்கள் கழித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்த் ராட் அல் – ஹுசெய்ன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டார். 2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான அவரின் விரிவான அவதானிப்பாகவே அந்த அறிக்கை அமைந்தது.
போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு அமைக்கப்படவேண்டிய நீதி விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டவர்களின் பங்கேற்பு குறித்து இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இடையறாது காட்டிவரும் எதிர்ப்பின் காரணமாக அல் ஹுசெய்ன் தனது முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து தளர்ந்து விடவில்லை என்பதை அறிக்கை வெளிகாட்டியது. வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு முறையிலான நீதிமன்றமே (Hybrid Court ) அமைக்கப்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்திய உயர்ஸ்தானிகர் வெளிநாட்டவர்களின் பங்கேற்புக்கு வசதியாக இலங்கை சட்டமொன்றை இயற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இலங்கையின் நீதிச் செயன்முறைகளில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று அரசாங்கத் தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அல் ஹுசெய்ன் இத்தகையதொரு கோரிக்கையை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
17 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் உயர்ஸ்தானிகர் இலங்கையில் நிலைமாறுகால நீதிச் செயன்முறைகள் மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்படுகின்றமையும் கடந்தகால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் விரிவான தந்திரோபாயமொன்று இல்லாதிருக்கின்றமையும் நிலையான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நோக்கிய நகர்வுகளைத் தடம்புரளச் செய்துவிடக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்று எச்சரிக்கை செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது. மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சாதகமான முன்னேற்றங்கள் ஓரளவுக்கு ஏற்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டிருக்கும் அல் ஹுசெய்ன் பொதுவில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட செயன்முறைகள் தொடர்பில் அதிருப்தி கொண்டிருப்பதை அறிக்கை தெளிவாக உணர்த்தியது. கலப்பு முறையிலான நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையில் அல் ஹுசெய்ன் உறுதியாக நிற்பது போர்க்குற்றங்கள் போன்ற பாரதூரமான குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கான நம்பகத் தன்மையையும் தகுதியையும் இலங்கையின் நீதித்துறை அமைப்புக்கள் கொண்டிருக்கவில்லை என்ற அபிப்பிராயத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. முன்னைய ஆட்சியில் இருந்ததைப் போலன்றி தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் மீளவும் நிலைநாட்டப்பட்டுவிட்டது என்ற அரசாங்கத் தலைவர்களின் பேச்சுக்கள் ஐ.நா.வின் முன் எடுபடவில்லை. திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலை, மூதூரில் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை, குமாரபுரம் படுகொலைகள், வெலிக்கடை சிறைக் கலவரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு ஆகியவற்றை உதாரணமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அல் ஹுசெய்ன் பாதுகாப்பு படைகள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற பாரதூரமான குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்னிறுத்துவதற்கான விருப்பமோ ஆற்றலோ அரசிடம் இல்லாத நிலை தொடரவே செய்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். நீதி மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பிலான அதன் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதில் அரசாங்கம் அக்கறை காட்டாதிருந்து வந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உயர்ஸ்தானிகரின் இந்த அறிக்கை வெளியான மறுகணமே ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புக்கு இடமில்லை என்ற தங்களது நிலைப்பாட்டை மீளவும் பிரகடனம் செய்தனர். அரசாங்கத்தை எவ்வாறு நடத்த வேண்டுமென்று அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் எமக்குக் கூறுவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறிய ஜனாதிபதி சிறிசேன, வடக்கில் பலாலியில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில், ‘படைவீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு ஒருபோதும் தனது அரசாங்கம் அனுமதிக்காது’ என்று சூளுரைத்தார்.
படைவீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முற்றிலும் உள்நாட்டு அதிகாரிகளைக் கொண்ட நீதி விசாரணைப் பொறிமுறையின் கீழ் கூட படைவீரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் என்றுதானே அர்த்தப்படுத்த வேண்டியிருக்கிறது.
இத்தகையதொரு பின்புலத்தில் இப்போது 2015 ஒக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மேலும் இருவருட கால அவகாசத்தைப் பெறக்கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இந்த கால அவகாசத்தை வழங்குவது தொடர்பான புதிய தீர்மானம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையில் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அதற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தீர்மானத்தின் முதல் நகல் வரைவு கடந்த வாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.
2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையினால் இனிமேல் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் 2018 மார்ச்சில் 37ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் எழுத்து மூல அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை தொடர்பான அடுத்த முக்கியமான அறிக்கை 2019 மார்ச்சில் 40ஆவது கூட்டத்தொடரின் போதே உயர்ஸ்தானிகரினால் சமர்ப்பிக்கப்படும் என்பதை நகல் வரைவின் வாசகங்கள் மூலம் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
2015 அக்டோபர் தீர்மானத்தின் எந்தவொரு அம்சமும் புதிய நகல் தீர்மானத்தில் மாற்றியமைக்கப்படவில்லை என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பிரத்தியேகமான கால அட்டவணைக்கு இலங்கையை கட்டுப்படவைக்கும் ஏற்பாடு புதிய தீர்மானத்தில் இடம்பெறவேண்டுமென்று பல நாடுகளின் தூதுக்குழுக்கள் விரும்புவதாக ஜெனீவா தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
நீதி விசாரணைப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படவில்லை என்று இலங்கை வியாக்கியானப்படுத்தக்கூடிய முறையில் அதற்கு வசதியாக புதிய தீர்மானத்தின் வாசகங்கள் அமையக்கூடுமென்றும் நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாமே இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளுக்கு இப்போது அக்கறையில்லை என்பதையே உணர்த்துகின்றன. கால அவகாசத்தைப் பெறப்போகின்ற இலங்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடு தொடர்பில் நிறைவேற்றவேண்டிய காரியங்களை செய்வதிலும் பார்க்க அவற்றை மேலும் தாமதிப்பதற்கான அல்லது தட்டிக்கழிப்பதற்கான தந்திரோபாயங்களையே கையாளும் என்பதே போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கவலையாக இருக்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினை வெளிநாடுகளுக்கு சலிப்பைத் தருகின்ற ஒன்றாக மாறிவிட்டதாக இராஜதந்திரி ஒருவர் கூறியதாகவும் ஒரு செய்தியைப் பார்க்கக்கிடைத்தது.