தமிழகத்தில் ஆன்மாவின் வழிகாட்டலில் ஒரு அரசியல்
வீரகத்தி தனபாலசிங்கம்
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக நடந்தேறிய பல திடீர்த் திருப்பங்களுடன் கூடிய திரைப்படப்பாணியிலான அரசியல் நிகழ்வுப் போக்குகள் ஒருவாறாக ஒரு இடைநிலை முடிவமைதிக்கு வந்திருக்கின்றன போலத் தெரிகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக ஆட்சியதிகாரத்துக்கு வர ஆசைப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் சொத்துக்குவிப்பு மேன் முறையீட்டு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து பெங்களூரில் சிறைவாசத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவரின் விசுவாசியான எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கின் முதலாவது குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சிறைக்குப் போவதற்கு முன்னதாக ஓ. பன்னீர்ச்செல்வத்தை மூன்றாவது தடவையாகவும் முதலமைச்சராக்கியிருப்பார். ஜெயலலிதாவின் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல்வாழ்வில் பெரும் பகுதியில் அவரை இடையறாது அச்சுறுத்திக்கொண்டிருந்த இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை மரணத்தினால் மாத்திரமே விடுவிக்கக்கூடியதாக இருந்தது.
கடந்த டிசம்பரில் ஜெயலலிதா காலமானதையடுத்து மூன்றாவது தடவையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தை அகற்றிவிட்டு அப்பதவியைத் தனதாக்கிக் கொள்ள ஜெயலலிதாவின் ஆருயிர்த்தோழி சசிகலா முயற்சித்ததன் விளைவே கடந்த இருவார கால சர்ச்சைகள். 1987 டிசம்பரில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலமானதையடுத்து, அவரின் மனைவி ஜானகி தலைமையிலும் காதலி ஜெயலலிதா தலைமையிலும் அண்ணா தி.மு.க. இரு அணிகளாகப் பிளவுபட்ட போதிலும் அடுத்துவந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா அணியே செல்வாக்குமிக்கதென்று நிரூபிக்கப்பட்டதையடுத்து அணிகள் ஒன்றுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் தலைமையிலான அணியாகவும் சசிகலா அணியாகவும் பிளவுபட்டிருக்கும் இக்கட்சி மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் குறித்து உடனடியாக எதையும் கூறமுடியவில்லை. என்றாலும், தனது பெறாமகன் தினகரனையே கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக்கி விட்டுச் சிறை சென்றிருக்கும் சசிகலாவின் அணியே மாநிலத்தில் இப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால் பன்னீர்செல்வத்தினால் பெரிதாக வியூகங்களை வகுப்பது சிரமமானதாக இருக்கக்ககூடும்.
எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. விற்குள் ஏற்பட்ட பிளவு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிப்பதற்கு வசதி செய்து கொடுத்தது.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பிளவையும் சாத்தியமானளவுக்கு தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் கலைஞரின் மகன் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகக் கொண்டு மீதமுள்ள நான்கு வருடகாலத்துக்கும் ஆட்சியதிகாரத்தில் தொடருவதற்கு அண்ணா தி.மு.க. வினர் உறுதியாக இருப்பார்களேயானால், 2021 வரை அடுத்த சட்டசபைத் தேர்தலுக்காக காத்திருப்பதைத் தவிர தி.மு.க. வினருக்கு வேறு வழியில்லை. ஆனால், எம்.ஜி.ஆரைப் போன்றோ அல்லது ஜெயலலிதாவைப் போன்றோ ஜனரஞ்சகமான ஆளுமை கொண்ட தலைமைத்துவம் ஒன்று இல்லாத நிலையில், ஏற்கனவே பிளவு ஏற்பட்டு விட்ட கழகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதென்பது கஷ்டமான காரியமே. (பழனிச்சாமி பதவியேற்ற உடனடியாக முகநூலில் பதிவொன்றைச் செய்த சென்னை ஆங்கிலப் பத்திரிகையொன்றின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர், பழனிச்சாமியின் கார்ட்டூனை நான் சரியாக வரையத் தொடங்கும் வரையாவது அவர் பதவியில் நீடிப்பார் என நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார் .) சசிகலாவைப் பொறுத்தவரை அண்ணா தி.மு.க. தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் செய்து விட்டுச் சென்றிருக்கும் ஏற்பாடுகளை கழகத் தொண்டர்கள் மாத்திரமல்ல தமிழக மக்களும் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப்பொறுத்தே எதிர்கால நிலைவரங்கள் அமையும்.
இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் கொள்கை, கோட்பாடு என்று பெரிதாக எந்த வேறுபாடும் கிடையாது. ஆட்சிக்கு வருவதும் பழிபாவத்துக்கு அஞ்சாமல் பணம் குவிப்பதுமே அவ்விரு கட்சிகளின் தலைவர்களின் ‘இலட்சியங்களாக‘ இருந்ததே அண்மைக்கால வரலாறு. தலைமைத்துவத்தில் இருக்கக்கூடிய –ஆளுமைகளைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட துதிபாடல் வழிபாட்டு கலாசாரம் அண்ணா தி.மு.க. விற்குள்ளும் தி.மு.க.விற்குள்ளும் வேரூன்றிப் போயிருக்கிறது. ஜெயலலிதா இந்த தனி நபர் வழிபாட்டு அரசியல் கலாசாரத்தை ஒரு உச்ச நிலைக்கு வளர்த்து விட்டே சென்றிருக்கிறார். அண்மையில் பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு முன்னதாக சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்திற்குள் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று தியானம்செய்துவிட்டு ‘அம்மா‘ வின் ஆன்மா கட்டளையிட்டதன் பிரகாரமே செயற்படுகிறேன் என்று பிரகடனம் செய்தார்.
ஜெயலலிதா விசுவாசிகளைப் பொறுத்தவரையில் அந்த நினைவிடம் ஒரு வழிபாட்டுத் தலமே. சசிகலாவும் கடந்த புதன்கிழமை பெங்களூர் சிறைக்குச் சென்று சரணடைவதற்கு முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் வழிபட்டுவிட்டு சபதமும் எடுத்துக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
அண்ணா தி.மு.க. வின் அரசியல் என்பது அடிப்படையில் கருணாநிதி குடும்பத்தவர்களுக்கும் தி.மு.க. வுக்கும் எதிரானதே. அதற்கு காரணம் கருணாநிதியுடன் முரண்பட்டுக்கொண்டே எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார். முற்றுமுழுதாக கருணாநிதி மீதான குரோதத்தை பிரதான பிரசாரப் பொருளாகக் கொண்டு தான் எம்.ஜி. ஆரின் அரசியல் செயற்பாடுகள் அமைந்தன. அதே வழியிலேயே ஜெயலலிதாவும் அரசியல் செய்தார். கருணாநிதியை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூட ஜெயலலிதா தவிர்த்தார். அத்தகையதொரு கசப்பு அரசியல் கலாசாரத்தையே அவர்கள் வளர்த்தெடுத்திருந்தார்கள். இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் கருணாநிதி குடும்பத்துக்கு எதிரான உணர்வுகளைப் பிரதானமாகக் கொண்ட அரசியலை அண்ணா தி.மு.க. வினால் முன்னெடுக்கக் கூடியதாக இருக்குமா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டபிறகு சென்னைக்கு வெளியே கூவத்தூரில் நட்சத்திர ஹோட்டலில் தனது அணியின் சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா ‘அம்மாவுக்கும் எங்களுக்கும் எதிராக இந்த சொத்துக்குவிப்புவழக்கைப் போட்டவர் கருணாநிதி. தி.மு.க என்று ஒரு கட்சி இருந்ததா என்று எதிர்காலத்தில் ஆட்கள் கேட்கக்கூடியதாக நாம் செயற்பட வேண்டும்‘ என்று கூறினார்.
எம்.ஜி.ஆருக்குப்பிறகு கட்சியின் தலைமைத்துவத்துக்கும் ஆட்சிக்கும் வருவதில் ஜெயலலிதா பல சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்க்கொண்டு கடந்து வந்ததைப் போன்று இன்று தனக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளைத் தாண்டி தன்னாலும் வெற்றிகரமாக வெளிக்கிளம்ப முடியுமென்று சசிகலா நினைக்கிறார் போலத் தெரிகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு சகலவிதத்திலும் அவரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பதில் தான் சசிகலா பெரிய தவறை இழைத்திருக்கிறார். அம்மாவுக்குப் பதிலாக சின்னம்மா என்ற தோரணையில் பன்னீர்ச்செல்வம் உட்பட கழகத்தின் மூத்த தலைவர்களே காலடியில் வீழ்ந்ததும் அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்தது போலும். கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா வளர்த்தெடுத்த கசப்பு அரசியல் கலாசாரத்தை மேலும் முன்னெடுக்க வேண்டிய முனைப்பு சசிகலாவுக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைச் சாதிக்கக்கூடிய ஆளுமை அவரிடம் இருக்கிறதா? எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரின் இடத்தில் ஜெயலலிதாவை வைத்துப் பார்த்ததைப் போன்று ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை வைத்துப் பார்க்க மக்கள் தயாராயிருக்கிறார்களா? சிறையிலிருந்து சசிகல வெளியே வரும்போது அண்ணா தி.மு.க. என்ன கோலத்தில் இருக்குமோ?
சசிகலா சிறைக்குள் இருந்து கொண்டு தனது குடும்பத்தவர்களின் ஊடாக அண்ணா தி.மு..க.வை வழிநடத்தவோ அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியுமா என்பதை விரைவில் உணரக்கூடியதாக இருக்கும்.
சிறைக்குப் போனதால் தமிழக மக்கள் மத்தியில் சசிகலா மீது அனுதாபம் பிறந்திருக்கிறது என்று கூறிவிட முடியாது. பதிலாக ஜெயலலிதா ஊழல்களில் சம்பந்தப்படுவதற்கு சசிகலா குடும்பத்தவர்களே முக்கிய காரணம் என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. ஜெயலலிதாவை ஒரு ‘தெய்வம்‘ போன்று கட்டியெழுப்பப்பட்ட பிம்பத்துக்கு மறுபுறத்தில் தன்னையும் தன் குடும்பத்தவர்களையும் சாத்தான்களாக வர்ணித்துக் கட்டியயெழுப்பப்பட்ட பிம்பத்தை அறியாதவராக சசிகலா இருந்திருக்கிறார் என்று கடந்தவாரம் தமிழக அரசியல் அவதானி ஒருவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக உச்சநீதிமன்றம் கடந்த வார தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான உறவு பற்றி தெரிவித்த கருத்தொன்று மிகவும் கவனத்திற்கொள்ள வேண்டியதாகிறது.
ஜெயலலிதா பரோபகார உணர்வின் தூண்டுதலின் காரணமாக அல்ல, தங்களது கிறிமினல் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படக்கூடிய எந்தவொரு சட்டச் சிக்கல்களில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மிகவும் சூழ்ச்சித்தனமான நோக்குடன் தான் சசிகலாவை போயஸ் தோட்ட வாசஸ்தலத்தில் தன்னுடன் வாழ அனுமதித்ததாக உச்சநீதிமன்ற நீதியரசர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இன்று அவரும் சசிகலாவுடன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதற்காக மூன்றாவது தடவையாக முதலமைச்சர் பதவியைத் துறக்க வேண்டியேற்பட்டிருக்கும். 100 கோடி ரூபாவை தண்டப்பணமாக செலுத்தவேண்டியேற்பட்டிருக்கும். உயிருடன் இல்லை என்ற காரணத்துக்காகவே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஒரு இலட்சம் கோடி ரூபா, நான்கு இலட்சம் கோடி ரூபா என்றெல்லாம் ஊழல் செய்திகளில் அடிபடுகின்ற இன்றைய காலக்கட்டத்தில் வெறுமனே 66.6 கோடி ரூபா சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கும் சகபாடிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனை இன்றைய தலைமுறையினருக்கு ஆச்சரியமாகவும் அதீதமாகவும் கூடத்தோன்றலாம் என்று பேசப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட தொகையைவிடவும் பல ஆயிரம் மடங்கு தொகை ஊழல்களில் சம்பந்தப்பட்டதாக தமிழகத்தின் வேறு சில திராவிட இயக்க அரசியல் வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதன் காரணத்தினால்தான் பிற்காலத்தில் ஜெயலலிதாவின் ஊழல் தமிழக மக்கள் மத்தியில் ஒரு பொருட்டாகத் தென்படவில்லை. இலவசங்களை அள்ளி வீசினால் மக்கள் தங்களது முன்னைய நடத்தைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். இதனால்தான் ஜெயலலிதா தொடர்ச்சியாக தேர்தலில் பெரு வெற்றிகளைப் பெறவும் முடிந்தது.
ஆனால், இப்போது நீதிமன்றமே அவரை ஊழல் செய்தவர் என்று நிரூபித்திருப்பதால், அதுவும் தன்னால் செய்யப்படுகின்ற ஊழல் மோசடிகளுக்கு கவசமாக சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா பயன்படுத்தியதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் அம்மாவின் கொள்கைகளை பின்பற்றி அவரின் திட்டங்களை முன்னெடுக்கப் போகிறோம் என்றும் அம்மாவின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என்றும் அண்ணா தி.மு.க. அரசியல்வாதிகள் கூறும்போது தாங்கள் எதிர்கொள்ளப்போகிற தார்மீகச் சிக்கலை அவர்கள் விளங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை. எதிர்காலத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் இதை நிச்சயமாக தங்களுக்கு வசதியான முறையில் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதனால், ஜெயலலிதாவின் அரசியல் மரபு நல்லொழுக்க ஆட்சி முறைக்கு அப்பாற்பட்டதாகவே அடையாளப் படுத்தப்படப்போகிறது.
என்றாலும், முதலமைச்சராக பதவியேற்ற உடனடியாக பழனிச்சாமி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று வழிபட்டு அம்மா வழியில் சின்னம்மாவின் வழிகாட்டலில் ஆட்சி செய்யப்போவதாக அறிவித்ததையும் அடுத்து பன்னீர்ச்செல்வம் இப்போது அமைந்திருப்பது சசிகலா குடும்ப ஆட்சியென்றும் அந்த ஆட்சியை அகற்றி விட்டு அம்மாவின் விசுவாசிகளால் நிரம்பிய ஆட்சியை நிறுவப்போவதாகச் சூளுரைத்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. அம்மாவின் ‘ஆன்மாவே‘ தங்களுக்கு வழிகாட்டுவதாக இவர்கள் எந்த விதமான கூச்சமுமின்றிக் கூறுகிறார்கள். அந்த ஆன்மாவின் வழிக்காட்டலில் நடத்தப்படுகின்ற அரசியலின் கதியை அடுத்த ஒரு தேர்தலில் தான் பார்க்கக் கூடியதாகவிருக்கும்.
(இது பழனிச்சாமி அரசாங்கம் தமிழக சட்ட சபையில் அதன் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக கூட்டப்பட்ட விசேட கூட்டத்திற்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.)