அரசுடன் ஜே.வி.பி. ஒருபோதும் இணையாது : அனுரகுமார திசாநாயக்க அறிவிப்பு
மக்களின் பூரண ஆதரவை பெறும் வரை மக்கள் விடு தலை முன்னணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாது. மக்களுடன் இணைந்து செயற்படும் நாம் எந்தவொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத் தின் தவறுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு, அரசாங்கத்தினால் நாட்டிற்கும், மக்களுக்கும் முன்னெடுக்க வேண்டிய நலத்திட்டங்களை வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிட்டது.
எமது கட்சியானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமானால் அரசாங்க பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து விதமான ஊழல் செயற்பாடுகளும் மக்களுக்கு தெரியாமல் போவதோடு இதனை சுட்டிகாட்ட எந்தவொறு தரப்பினரும் முன்வர மாட்டார்கள். எவ்வாறாயினும் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் அனைத்துவிதமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவை செலுத்துவோம் எனவும் குறிப்பிட்டது.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மக்கள் சந்திப்பு ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட மக்கள் விடுதலை முன்னணியிடன் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்த தயாராக இருக்கின்றோம் என தெரிவித்திருந்தமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அனுர குமாரதிஸாநாயக்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகையில் . மக்களின் பூரண ஆதரவினை பெறும் வரை எந்தவொரு சுயநல தேவைக்காகவும் எமது கட்சியானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாது. நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களுடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றோம் அந்தவகையில் இந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்தகாலங்களில் மக்களுக்கு ஆதரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளோம்.
நல்லாட்சியினை ஸ்தாபிப்பதாக தெரிவித்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் இன்று ஊழல் வாதிகளை இணைத்து கொண்டு அரசியல்செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். ஊழல் விசாரணைகள் என்பன இன்று மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த அரசாங்கத்தின் ஊழல்செயற்பாடுகள் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்தொடர்பில் நாம் பல்வேறு ரீதியில் மக்களுக்கு வெளிப்படுத்திய போதிலும் இது தொடர்பிலான விசாரணைகளும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முகமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் நாம் பூரண ஆதரவினை வழங்க தயாராகவே உள்ளோம். அதே நேரம் ஊழல் வாதிகளுடன் இணைந்து செயற்பட நாம் எந்தவொறு சந்தர்ப்பத்திலும் த யாரில்லை.”
R-06




