இணைப்பு, சமஷ்டி இல்லை; பௌத்தத்துக்கு முன்னுரிமை: புதிய யாப்பில் இரண்டாவது சபை
– பார்த்தீபன் –
அரசியலமைப்புப் பேரவையில் அதன் வழிநடத்தல் குழுவால் எதிர்வரும் 10 ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு இருக்காது எனவும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வே முன்வைக்கப்படவிருப்பதாகவும் மிகவும் நம்பிக்கையான வட்ட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
இதனைவிட பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற அம்சம் மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் மாற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொது எதிரணி கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையிலேயே வழிநடத்தல் குழு தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில்தான் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது. இவ்வருட இறுதிக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்று கிடைக்கவில்லை என்றால், கூட்டமைப்புக்குள் சம்பந்தன், சுதந்திரன் ஆகியோர் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு தலைமை முன்னெடுத்தாலும், அது வெற்றியளிக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
இரண்டாவது சபை
அதற்கு மேலதிகமாக செனட் சபை போன்ற இரண்டாவது சபை ஒன்று அமைப்பற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. 55 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த சபை அமையும். ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் 5 உறுப்பினர்கள் விகிதம் 45 உறுப்பினர்கள் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களை எவ்வாறு தெரிவு செய்வது என்பதையிட்டு இப்போது ஆராயப்பட்டுவருகின்றது.
இதனைவிட 10 உறுப்பினர்கள் இரண்டாவது சபைக்கு கட்சி சார்பின்றி நியமிக்கப்படுவார்கள். புத்திஜீவிகள் என்ற அடிப்படையிலேயே 10 அறிஞர்களே இவ்வாறு இரண்டாவது சபைக்கு நியமிக்கப்படுவார்கள். துறைசார் வல்லுநர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடனேயே இவ்வாறு நியமனங்களைச் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.
அதிகாரப் பரவலாக்கல் திட்டம் 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் 13 பிளஸ் எனக் கூறிக்கொள்வதற்காகவே இரண்டாவது சபை அமைக்கப்படுகின்றது. 13 ஆவது திருத்தத்தில் உள்ளதைவிட மேலதிகமாக அது ஒன்றுதான் இருக்கும் எனவும் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் ஒருவர் தகவல் தந்திருக்கின்றார்.
மகிந்த அணி எச்சரிக்கை
ஒற்றையாட்சி, இணைப்பு, பௌத்த மதம் போன்ற விடயங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது. மதச்சார்பற்ற நாடாக இலங்கை பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்பதை இவ்வணியின் தலைவராகச் செயற்படும் தினேஷ் குணவர்த்தன கடுமையாக வழிநடத்தல் குழுவின் அமர்வின் போது எதிர்த்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட ஒற்றையாட்சி, இணைப்பு விடயத்திலும் அவர்கள் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட விடயங்களில் தமது கருத்தை ஏற்கவில்லை என்றால், வழிநடத்தல் குழுவின் அமர்வுகளில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என அவர் எச்சரித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதனைவிட அவ்வாறான நிலையில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால், சிங்கள மக்களால் அது நிராகரிக்கப்படும் எனவும் பொது எதிரணி எச்சரித்திருக்கின்றது. இந்த எச்சரிக்கை வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால், பெரும்பாலானவர்களின் ஆதரவும் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தார். ஆறு உப குழுக்களின் அறிக்கைகளை சமர்பித்து உரையாற்றிய போது பிரதமர் தெரிவித்த இந்த விடயங்கள் முக்கியமானவையாகும்.
கூட்டமைப்பின் குழப்பம்
இந்த நிலைமைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெருமளவு குழப்பத்துக்குள்ளாக்கியுள்ளது. அதனால்தான், கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்த சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 16 எம்.பி.க்களும் அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் குறித்தே பேசியிருக்கின்றார்கள். வழமையாக இவ்வாறான சந்திப்புக்களுக்கு சுமந்திரனை மட்டும் அழைத்துச் செல்லும் சம்பந்தன் அன்று தமது அணியின் 16 பேரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். தமது பலத்தைக் காட்டுவதும் அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

16 எம்.பி.க்கள் சகிதம் ஜனாதிபதியை சம்பந்தன் சந்தித்த போது…
டிசெம்பர் 10 ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் அறிக்கை வெளிவரும் என்பதால் அதற்கு முன்னர் மீண்டும் சந்திப்பதற்கும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. அடுத்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முக்கிய அமைச்சர்களும் பங்குகொள்வார்கள் எனவும் தெரிகின்றது. வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் சில மாற்றங்களையாவது செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் அக்கறை காட்டுகின்றார். இதற்காக அரசாங்கத்துக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த என்ன செய்யவும் அவர் தயாராக இருப்பதாக கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் போது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றும் உள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகளில் மகிந்த ராஜபக்ஷவின் கருத்தையும் அறிந்துசெயற்பட முற்படுவதாக மைத்திரி கூறியிருக்கின்றார். அதாவது, அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவில் மகிந்த அணியின் செல்வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதுதான் இதன் அர்த்தம்!
இன்னும் இரு வாரங்கள் மட்டும்தான் உள்ளது. அதற்குள் பரபரப்பான திரைமறைவு காய்நகர்த்தல்கள் பல இடம்பெறலாம். கொழும்பு அரசியல் சூடாக இருக்கின்றது!




