இந்தியா இல்லாத தீர்வு ?
யதீந்திரா
கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கின்றது. சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக, இவ்வாறானதொரு சந்திப்பிற்காக கூட்டமைப்பு காத்துக்கிடந்தது. இந்திய தூதுவரை சந்திக்கும் சந்தர்பங்களிலெல்லாம், சம்பந்தன், இந்திய பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார். இந்த அடிப்படையில்தான், இந்திய தூதரகம், நீண்ட நாட்களாக இவ்வாறானதொரு சந்திப்பிற்கான முற்சியை மேற்கொண்டுவந்தது. பிரதமர் மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஸ் வர்தன் ஆகியோர், புதுடில்லியில் இருக்கும் தருணமொன்றிற்காக இந்திய தூதரகம் காத்திருந்தது. இந்த பின்புலத்தில்தான், கூட்டமைப்பின் புதுடில்லி பயணத்திற்கான திகதியும் திட்டமிடப்பட்டது. ஆனால் இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைத்தான் சம்பந்தன் சாதாரணமாக புறம்தள்ளியிருக்கின்றார்.
சம்பந்தன் ஏன் இந்த சந்திப்பை பிற்போட்டார்? சம்பந்தன் இதற்கு மூன்று காரணங்களை கூறியிருக்கின்றார். வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும், பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது, மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் இடம்பெறவுள்ளது. ஒரு பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமரை சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தவிர்ப்பதற்காக சம்பந்தன் கூறியிருக்கும் காரணங்கள்தான் இவைகள்! வரவு செலவுத்திட்ட விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பசில் ராஜபக்சவை விடவும் சம்பந்தனுக்கு வரவு செலவுத்திட்டம் முக்கியமான ஒன்றா? ஒரு வேளை வரவு செலவுத்திட்டம் முக்கியமானதென்றால், ஏனைய இரண்டு காரணங்களை சம்பந்தன் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை. ஒரு இனத்தின் எதிர்காலம் தொடர்பான விடயத்தின் போது, மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணத்தை சம்பந்தன் தொடர்புபடுத்தியிருக்கின்றார். இந்திய பிரதமருடனான சந்திப்பை பிற்போடுவதற்காக, சம்பந்தன் குறிப்பிட்டிருக்கும் மூன்று காரணங்களும், நகைச்சுவைக்குரியது என்பதை, புரிந்துகொள்வற்கு அரசியல் அறிவு தேவையில்லை. இந்த நகைச்சுவைக்காக, நிச்சயம், இந்திய தூதரக அதிகாரிகள் சிரித்திருப்பார்கள்.
தமிழர் பிரச்சினையில் இந்தியா மீளவும் தலையீடு செய்வதை சம்பந்தன் தவிர்க்க விரும்புகின்றாரா? சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகள் இப்படியானதொரு கேள்விக்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய உயர் அதிகாரிகள் வழமைபோல் கூட்டமைப்பை சந்தித்துச் செல்கின்றனர் ஆனால், கூட்டமைப்போ இந்தியாவை நோக்கிச் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டுமென்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரும் போதெல்லாம், அதனை சம்பந்தன் தடுக்கின்றார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில், ஒரு முறை கூட புதுடில்லி செல்லவில்லை. ஒரு காலத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அவர் எவ்வாறு புதுடில்லியுடன் உரையாடியிருந்தார். அவருக்கு இந்திராகாந்தி எத்தகைய கௌரவத்தை வழங்கியிருந்தார் என்பது வரலாறு. இது பற்றி அமிர்தலிங்கம் எழுத்திலும் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் சம்பந்தனோ, சிங்களவர்களை காரணம் காட்டி, புதுடில்லிக்கான பயணத்தை தவிர்த்துவருகின்றார். மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்த போது, புதுடில்லி சென்று உரையாடுவோம் என்னும் கோரிக்கையை, அப்போது கூட்டமைப்பின் அங்கமாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார். அவ்வாறு நாம் செய்தால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் – குழம்புவார்கள், என்னும் காரணத்தை கூறி, சம்பந்தன் அதனை தட்டிக்கழித்தார்.
ரணில்-மைத்திரி ஆட்சியில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், புதுடில்லி செல்வதற்கான யோசனையை முன்வைத்த போது – அப்போதும், கருமங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன – இப்போது நாம் அங்கு சென்றால் தென்னிலங்கையில் பதட்டங்கள் ஏற்படுமென்று கூறி அதனையும் சம்பந்தன் தட்டிக்கழித்தார். இப்போது இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை பொறுப்பற்ற காரணங்களை கூறி பிற்போட்டிருக்கின்றார்.
ரணில்-மைத்திரி கூட்டரசாங்கமும் கூட்டமைப்பும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்தது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை காணமுடியுமென்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. புதிய அரசியல் யாப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லையென்பதை சிலர் எதிர்வு கூறியிருந்தனர். புதிய அரசியல் யாப்பு வருவதற்கான வாய்ப்பில்லை – இந்த ஆடம்பரமான சொல்லாடல்கள் அனைத்தும் ஒரு கட்டத்துடன் முடிவுக்குவந்துவிடும் என்பதை இந்தக் கட்டுரையாளரும் பல்வேறு சந்தர்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் முற்றிலும் உள்நாட்டு நகர்வுகள் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியுமென்று நம்பினர்.
ஆனால் இறுதியில் எதிர்பார்த்தது போன்றே, புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் புஸ்வானமாகியது. விமர்சனங்கள் இருப்பினும் கூட, சில முயற்சிகள் இடம்பெற்றது உண்மைதான். ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாகிவிட்டது. அமெரிக்க பயணத்தை தொடர்ந்து – அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக, சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஜனவரி மாதமளவில், அமெரிக்கா, அதன் கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்குமென்றும் சுமந்திரன் எதிர்வு கூறுகின்றார். இவ்வாறானதொரு பின்னணியில்தான் – சம்பந்தன், இந்தியாவிற்கு செல்வதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கின்றார். அவ்வாறாயின், அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டை அறிந்த பின்னர், புதுடில்லிக்கு செல்ல முயற்சிக்கின்றாரா? அல்லது இந்தியா இல்லாமல் ஒரு தீர்வை எதிர்பாக்கின்றாரா? கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முற்சியின் கீழ், தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு கிடைக்குமென்று சம்பந்தன் எதிர்பார்க்கின்றாரா?
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் இந்தியா ஒன்றே அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இலங்கையின் உடனடி அயல்நாடென்னும் வகையில், இந்தியா எப்போதும் இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில்தான், இலங்கையின் இன முரண்பாட்டிற்குள், ஒரு சமரச முயற்சியாளராக இந்தியா தலையீடு செய்தது. முன்னைநாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணின் வார்த்தையில் கூறுவதானால் – புவியியல் நிலைமையும் வரலாறும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டை நோக்கி இந்தியாவை தள்ளியிருந்தது. இந்தியாவின் சமரச முயற்சியின் விளைவாக வந்ததுதான் மாகாண சபை முறைமை. அந்த மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்னுமடிப்படையில்தான், புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது.

தற்போதைய தென்னிலங்கை ஆட்சியாளரை பொறுத்தவரையில் தமிழர் பிரச்சினையென்பது ஒரு உள்நாட்டு விவகாரம். இதில் இந்தியாவோ வேறு எவரோ தலையீடு செய்யவேண்டியதில்லை. இந்தியாவிற்கான தூதுவர் மிலிந்த மொறகொட, இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், இதனை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். அதாவது, அரசியல் தீர்வென்பது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரமாகும். இதன் மூலம் அவர் இந்திய தலையீட்டை முற்றிலுமாக மறுதலிக்கின்றார். அவர் சமர்ப்பித்த மூலோபாய அறிக்கையிலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேசப்படவில்லை. இது தொடர்பில் பேராசிரியர் சூரிய நாராயணன் இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதிய கட்டுரையில் விவாதித்திருந்தார். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை புறம்தள்ள முற்படுவது போன்றுதான், இப்போது சம்பந்தனும் செயற்படுகின்றாரா? தமிழர்களுக்கான அரசியல் தீர்வு முற்றிலும் ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதுதான் சம்பந்தனதும் நிலைப்பாடா?
இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர், அசியல் தீர்வு தொடர்பில் இடம்பெற்ற எந்தவொரு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் அந்த முயற்சிகள் எவற்றிலும் இந்தியாவின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. நோர்வேயின் மத்தியஸ்த்த முயற்சியில் இந்தியாவிற்கு எந்தவொரு பங்களிப்பும் இருக்கவில்லை. இந்தியாவை கோபப்படுத்திவிடக் கூடாதென்னும் முன்னெச்சரிக்கையுடன், எரிக் சொல்ஹைய்ம் விடயங்களை புதுடில்லிக்கு கூறிக் கொண்டிருந்ததை தவிர, இந்தியாவின் எந்தவொரு பங்களிப்பும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் இருந்திருக்கவில்லை. நோர்வேயின் மத்தியஸ்த்தம் என்பது அடிப்படையில் ஒரு மேற்குலக மத்தியஸ்தமாகவே இருந்தது.
இதன் பின்னர் இடம்பெற்ற பிரதானமான தீர்வு முயற்சி ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்தது. ஒரு புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதே சம்பந்தனின் திட்டமாக இருந்தது. இதன் போதும் இ;ந்தியா பார்வையாளராகவே இருந்தது. சம்பந்தனை பொறுத்தவரையில், இந்தியாவை சம்மந்தப்படுத்தினால், சிங்களவர்கள் கோபிப்பார்கள். ஆனால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடையான மாகாண சபை முறைமையை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில்தான், அதனை முற்றிலுமாக புறம்தள்ளும் வகையில் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பில் சம்பந்தன் ஒரு நாகரீகத்திற்காக கூட, இந்தியாவின் ஆலோசனைகளை கோரியிருக்கவில்லை.
விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் மட்டும் துருத்திக் கொண்டு தெரிகின்றது. தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு விடயம் மட்டுமே இதுவரையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமை ஒன்றுதான். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் அந்த முயற்சிகள் எவற்றிலும், இந்தியாவின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. இது தமிழர் தலைமைகளுக்கு கூறும் செய்தி என்ன?


