செய்திகள்

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை விரைவில் கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, விமானத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பிராண்ட்பேண்ட் வசதிகளை வழங்கி வரும் ஆபரேட்டர்களுக்கு இதற்கான அனுமதி வழங்குவது குறித்தும் டெலிகாம் துறை யோசித்து வருகிறது.

ஏற்கனவே, மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள 30 முக்கிய ஏர்போர்ட்டுகளில் இலவச வை-ஃபை இண்டர்நெட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் 30 நிமிடங்களுக்கு இலவசமாகவும் அதன்பின், பயன்படுத்த குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களே வழங்கி வருகின்றன. பெரும்பாலான விமான பயணிகள் நீண்டகாலமாக இந்த இன்பிளைட் வை-ஃபை வசதியை எல்லா விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விமானங்களில் பறந்து கொண்டிருக்கும் போது மொபைல் போன்களை பிளைட் மோடில் பயன்படுத்துவதற்கும் கூட விதிமுறைகள் இருக்கிறது. ஆகவே, வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொடுக்க விதிமுறைப்படி அனுமதி பெற வேண்டும். பொதுவாக, கிரவுண்ட் ஸ்டேஷனில் உள்ள பிராண்ட்பேண்ட் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் சர்வரிலிருந்து சாட்டிலைட் வழியாக வானில் விமானத்திற்கு இண்டர்நெட் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல முன்னணி விமான நிறுவனங்கள் இந்த வை-ஃபை வசதியை வியாபார யுக்தியாக செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஏர்-கிரவுண்ட் தொழில்நுட்பம் மூலம் 3.1 Mbps வேகத்தில் வழங்கும் இண்டர்நெட்டை காஸ்ட்லியாகவும், 256 Kbps குறைவான வேகத்தில் இயங்கும் இண்டர்நெட்டை குறைந்த கட்டணத்திலும் வெளிநாட்டு விமானங்கள் வழங்குகிறது.