செய்திகள்

சூடுபிடிக்கும் தமிழக அரசியல் ;ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த சசிகலா

தமிழக ஊடக வரலாற்றில் முதல் முறையாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நேர்காணல் ஆங்கில இதழ் ஒன்றின் ஜனவரி மாத பதிப்பில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பேசப்படும், ஆனால், அதிகம் பேசாத சசிகலாவின் நேர்காணலை பிரசுரித்த முதல் இதழ் எனும் பெருமையை பிரவோக் எனும் இதழ் பெறுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாகி, தற்போது அதிமுக பொதுச் செயலர் பதவிக்கு பேசப்படும் வரை, அவர் ஊடகங்களிலோ தனிப்பட்ட முறையிலோ பேசியது இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தோழியாகும் முன்பு, ஒரு தமிழ் வார இதழில் சசிகலாவின் நேர்காணல், விளையாட்டிற்கு வருகிறது வீடியோ என்ற தலைப்பில் பிரசுரமானது.

ஆனால், அதன்பிறகு ஜெயலலிதாவின் நட்பு கிடைத்து, தமிழக அரசியலில் மிக முக்கியமான நபராகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் அருகாமை கிடைத்த பிறகு, அவர் மீது ஊடக வெளிச்சம் படவேயில்லை.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் தானும் சந்தித்த பிரச்னைகள், படைத்த சாதனைகள் போன்றவற்றை ஆங்கில இதழில் பகிர்ந்து கொண்டுள்ளார் சசிகலா.

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான இந்த சூழலில் ஆங்கில இதழுக்கு சசிகலா அளித்திருக்கும் பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே சமயம், அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு அச்சாரமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

n10