செய்திகள்
இரண்டு பிரதான கட்சி-ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம்
இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே இலங்கையை உருவாக்குவதே நாட்டின் பெரும்பாலான மக்களின் விருப்பமாகுமென்றும் பிரதமர் கூறினார்.
கொழும்பு பிஷப் கல்லூரி அரங்கில் விஜயகுமார மன்றம் நேற்று ஏற்பாடு செய்திருந்த விஜயகுமாரதுங்கவின் 29வது நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில் .
பெரும்பாலான மக்களின் கருத்திற்கு செவிசாய்த்து இலங்கையின் அடையாளத்தைப் பேணி அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் கலாசாரங்களுக்கும் மதிப்பளிக்கக்கூடிய ஒரே இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எண்ணம் ஈடேறவில்லை. அதனால், 2015ம் ஆண்டில் மக்கள் இரண்டு பிரதான கட்சிகளிடமும் இந்த சவாலை ஒப்படைத்ததனர்.
இனவாதத்தையும் மத பேதங்களையும் ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்தாலும் அது வெற்றியளிக்கவில்லை. இனங்களையும் மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஒரேயடியாக நிறைவுக்கு கொண்டு வர முடியாது.
நாட்டை முன்னேற்ற கிடைத்த இந்த இறுதி சந்தர்ப்பத்தின் மூலம் பயனடைந்து கொள்ள வேண்டும். நாட்டின் பெரும்பாலான மக்களினதும் உலக நாடுகளினதும் முழுமையான ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் 2015ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்தன என்று தெரிவித்தார்.
n10




