செய்திகள்

இலங்கையின் சகவாழ்வு சமத்துவ பயணத்தில் கனடா ஒரு வெளிநாட்டு பங்காளி: மனோ கணேசன்

இலங்கையில் நிலவிய பதட்ட நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து சென்று நமது நாட்டவர்கள், பெரும்பாலும் தமிழர்கள் கனடாவில் சென்று குடியேறிய காரணத்தை வைத்துக்கொண்டு அந்த நாட்டின் மீதான வெறுப்புணர்ச்சி இந்த நாட்டில் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இது வரலாறு. இன்று பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்நாட்டுக்கு வந்திருக்கும் கனடிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் நிலவும்  கனடா பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றி அமைத்துள்ளார்.  இலங்கையின் சகவாழ்வு சமத்துவ பயணத்தில், தாம் ஒரு வெளிநாட்டு பங்காளி என்பதை கனடா இன்று எடுத்து காட்டியுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
6
கனடா நாடு வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோனின் இலங்கை வருகையையொட்டி, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சில், இடம்பெற்ற ‘தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு கருத்திட்டம்’ என்ற கனடா-இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்து இடும் வைபவத்தின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கை அரசியலமைப்பில் மொழியுரிமை கொள்கை நீண்டகாலமாக இருகின்றது. ஆனால், அது நடைமுறை படுத்தப்படவில்லை. அதுதான் பிரச்சினை. அரசியலமைப்பில் உள்ள மொழியுரிமை விதிகள் நடைமுறையாவதன் மூலம், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கு அது ஒரு முன்னோடியாக அமையும். தேசிய இனப்பிரச்சினை முழுக்க முழுக்க மொழிபிரச்சினை அல்ல. இனபிரச்சினையில் அது முக்கிய அங்கம். மொழி பிரச்சினை தீர்க்கப்படுவதன் மூலம் முழு தேசிய இனப்பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், மொழி பிரச்சினையின் தீர்வு, தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும். எங்கள் மொழிக்கு சமவுரிமை கொடுக்க முடியாத நீங்கள் எப்படி எங்கள் இனத்துக்கு சமத்துவம் வழங்க போகிறீர்கள் என்ற மிக நியாயமான கேள்வியை தமிழ் பேசும் மகள் இன்று எழுப்புகிறார்கள். தமிழ் மக்களின் சார்பாக நானும் அந்த கேள்வியை எழுப்பினேன். அதனால்தான் நான் இன்று இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன்.
7
இந்த சூழ்நிலையில்தான், கனடா அரசு, எமது அரசுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்கிறது. இதன்மூலம், சுமார் 1250 மில்லியன் பெருமதியான உதவிகள் எமக்கு கிடைக்க உள்ளன. இந்த செயற்பாடு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படும். இந்த திட்டத்தின் பெயர் ‘தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு கருத்திட்டம்’. இந்த திட்டம் கடந்த கடந்த காலங்களிலும் இருந்து வந்தது. கனடா எமது நாட்டுக்கு அன்று தொட்டு உதவி செய்து வந்துள்ளது. ஆனால், இப்போது இது அதிகரித்த உதவி தொகையுடன் கூடியதாக எமது நல்லாட்சி அரசின் கீழ் நடைமுறையாக போகின்றது.
R-06