செய்திகள்

இலங்கையில் இந்திய முதலீடும் டில்லியால் கைவிடப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும்

சீனாவை ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் எதிர்க்கிறார்களெனக் கூறும் தந்திரோபாயத்தை முறியடிக்க,  பொருளாதார உதவிக்காகவேனும் சீனாவோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருதடவை உரையாடினாலே போதும், பிராந்தியத்தில் தீடீர் மாற்றத்தைக் காணலாம்

-அ.நிக்ஸன்-

சீனாவின் பொருளாதார விரிவாகத்துக்குள் இலங்கை சென்றுவிட்டது என்பதாலோ, என்னவோ, இலங்கையில் கூடுதல் முதலீடுகளைச் செய்வது தொடர்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து இந்தியா நேரடியாக ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை மையம் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இணையவழி மாநாடு இந் மாதம் ஒன்பதாம்  ஆம் திகதி இடம்பெற்றிருக்கிறது.

அதனைத் தொடர்ந்தும் சென்ற திங்கட்கிழமையும் மாநாடு  இடம்பெற்றிருக்கிறது. புதுடில்லி, மும்பாய் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள இந்திய முதலீட்டாளர்களும் இந்திய மத்திய அரசின் உயர்மட்டப் பிரநிதிகள் சிலரும் கொழும்புக்கு வந்தும் சென்றிருக்கின்றனர்.
ஓன்பதாம் திகதி இ;டம்பெற்ற மாநாட்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருக்கின்றனர்.துறைமுகங்கள், கப்பல் துறை, பொருள்சார் சேவைகள், தொடர்பாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து, சொத்து வியாபாரம், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் மீது எதிர்கால பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான இருதரப்பு பங்குடைமை கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக மாநாட்டில் இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் திரு.பசன் வணிகசேகர இலங்கையில் முதலீடுகள் செய்ய வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளித்தார்.

இலங்கையில் ஏற்கனவே முதலீடுகளை மேற்கொண்டு வரும் சர்வதேசத் தகவல் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனைகள் இந்திய நிறுவனம் (Technologies is an Indian multinational information technology (IT) services and consulting company- HCL), சர்வதேச இந்திய எண்ணெய்க்கூட்டுத்தாபனம் Indian Oil Corporation Limited (IOCL)  உள்ளிட்ட இந்திய முதலீட்டு நிறுவனங்கள் மாநாட்டில் பங்குபற்றியதுடன் அதன் உயர்மட்டப் பிரதிநிதிகள் கடந்த வாரம் இலங்கைக்கும் வந்து சென்றிருக்கின்றனர்.

ஆகவே இலங்கையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதன் ஊடாகச் சீன முதலீடுகளையும் சீனாவின் ஆதிகத்தையும் சமப்படுத்த முடியுமென இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் நம்புகின்றன.

அதேவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக நடவடிக்கைகள் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 48.16 பில்லியன் டொலர்களை எட்டியிருப்பதாகச் சீனக் கம்பியூனிஸின் குளோபல் ரைம்ஸ் (globaltimes) என்ற ஆங்கிலச் செய்தித் த்தளம் கூறுகின்றது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்திய–சீன எல்லை மோதலினால், இருதரப்பு வர்த்தகம் 5.6 சதவீதம் குறைந்து எனவும் இத்தகைய சிக்கலான சூழலுக்கு மத்தியிலும்கூட, சீனா இன்னும் அமெரிக்காவை முந்திக்கொண்டு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா மாறியதெனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இறக்குமதி 90.2 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்தந் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் உலகின் வேறு நாடுகளுக்குச் சிறந்த முதலீட்டு இடங்களாக உருவெடுத்து வருவதாக பிஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த வாரம் தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

2019 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் சீன முதலீடுகள் 0.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2019 செப்டம்பர் மாத இறுதி வரை இந்தியாவில் ஒட்டுமொத்த சீன முதலீடு 5.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. செப்டம்பர் 2019 வரை சீனாவில் ஒட்டுமொத்த இந்திய முதலீடு 0.92 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் சீன வர்த்தக அமைச்சை மேற்கோள்காட்டி இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய சீனாவின் பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில்(Regional Comprehensive Economic Partnership- RCEP) இந்தியா கைச்சாத்திடவில்லை. ஏனெனில் சீனாவோடு தனியான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்துடுவதற்கான விரும்பத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. அவ்வாறு இல்லையென்றாலும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஆசிஈபி எனப்படும் ஒப்பந்தத்தில் இணையவும் முடியும்.

ஆகவே சீனாவோடு அரசியல் ரீதியான பகைமை இந்தாலும் குறிப்பாக இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்திய- சீன எல்லை மோதல் போன்ற முரண்நிலை இருந்தாலும், வர்த்தக ரீதியில் சீனாவோடு உடன்பட வேண்டியதொரு தேவை இந்தியாவுக்கு உண்டு.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத் திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது தொடர்பாக இந்தியக் கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக்குமார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உண்ணிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதிலும் நியாயம் உண்டு.

ஏனெனில் வர்த்தக ரீதியான செயற்பாடுகள் இருந்தாலும், இந்தியாவின் எந்தவொரு பிரதேசத்திலும் சீனா தனித்துக்கால் ஊண்டவில்லை. ஆனால் வர்த்தகச் செயற்பாடு என்ற போர்வையில் இலங்கையில் பல இடங்களில் சீனா ஆதிக்கம் செலுத்துவதுடன் இலங்;கைக்குக் அதிகளவு நிதிகளையும் வழக்கியுள்ளது. கொழும்புத் துறைமுகக் கடலைமூடி வர்த்தக நகரமே அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் இந்தியாவுக்குப் பிரச்சினை.

இதனை வேறு கோணத்தில் அணுகவே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness–MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கடந்த ஜனவரி மாதம் கொழும்புக்கு வந்து எச்ரிக்கைத் தொனியில் கேட்டிருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர். ஆனால் அது இன்றுவரை எதிர்பார்த்த தாக்கத்தை அது செலுத்தியதாகத் தெரியவில்லை.

இதனால் சென்ற திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் சூம் காணொளியில் உரையாடிய அமைச்சர் ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்தியக் கூட்டுச் செயற்பாடுகள் The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) தொடர்பாகவும் ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் உள்ள பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி (The Indian Ocean Rim Association- IORA) பற்றியும் இடித்துரைத்திருக்கிறார்.

ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் இந்து சமுத்திரத்தைச் தொடுகின்ற கடலின் கரையோர நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். அதாவது இந்துமா சமுத்திரத்தின் கடலோர எல்லைகளைத் தொடுகின்ற நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளாகும்.

கடந்த ஆண்டு இந்த அமைப்பில் பிரான்ஸ் இணைந்துள்ளது. ஏனெனில் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான சில தீவுகள் இந்தப் பிராந்தியத்தில் உண்டு. அது மாத்திரமல்ல இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விடயத்தில் பிரான்ஸ் தனித்தும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் இருக்கும் பாக்கிஸ்தான் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை. பாக்கிஸ்தான் அங்கம் வகிப்பதை இந்தியா விரும்பவில்லை என்பதையே நகர்வுகள் காண்பிக்கின்றன. இந்த அமைப்பில் இணைவதற்கு பாக்கிஸ்தான் விண்ணப்பித்துமுள்ளது.

அவுஸ்திரேலியா, மொரீசியஸ், மாலைதீவு, ஈரான், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. 1997 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் திகதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான செயற்பாடு என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இதில் உள்ள உறுப்பு நாடுகளின் 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3.8 ரில்லியன் டாலராக அதிகரிப்பதே நோக்கமாகும்.

பங்களாதேஷ் பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகும். 1997 ஆம் ஆண்டு யூன் மாதம் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பிலும் பாக்கிஸ்தான் இல்லை. 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பில் பாக்கிஸ்தான் அங்கம் வகிக்கின்றது.

ஆனால் தற்போது உருவாக்கியுள்ள இந்தோ- பசுபிக் விவகாரத்தினால் சார்க் அமைப்பைச் செயற்படுத்த இந்தியா பெருமளவில் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பாக்கிஸ்தான் அங்கம் வகிக்காத பிம்ஸ்டெக் அமைப்பை ஊக்குவிப்பதிலேயே இந்தியா ஆர்வம் காட்டுகின்றது.

ஏனெனில் பாகிஸ்தானும் சீனாவோடு அதிகளவு வர்த்தக விரிவாக்கங்களைச் செய்வதாலும், இந்திய எல்லையில் பாகிஸ்தான் மோதலில் சீன இராணுவ உதவியை பாகிஸ்தான் பெறக்கூடிய சூழல் ஏற்படலாமெனக் கருதியுமே, பாகிஸ்தான் தவிர்ந்த மேற்படி இரு அமைப்புகளையும் இயங்குவதன் மூலம் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமென இந்தியா நம்புகின்றது.

இந்த இரு அமைப்புகளையும் ஊக்குவிப்பதோடு இவற்றில் இலங்கையை முக்கிய செயற்பாட்டாளராக மாற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றது என்பதையே ஜெய்சங்கரின் சூம் காணனொளி உரையாடலை அவதானிக்க முடியும்.

சீன அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின் செயற்பாடுகளுக்கு முன்னதாக மேற்படி இரண்டு அமைப்புகளின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் ஜெய்சங்கர் அமைச்சர் தினேஸ் குணவர்த்னவுடன் உரையாடியிருக்கலாம்.

ஆனால் போட் சிற்றியின் செயற்பாட்டுக்கு முன்னராக இந்தியா எடுக்கும் இந்த நகர்வுகளுக்கு இலங்கை எந்தளவு தூரம் ஒத்துழைக்கும் என்ற கேள்வியும், முதலீட்டில் சீனாவுக்கு வழங்கிய அதேயளவு முக்கியத்துவத்தை இந்தியாவுக்கும் இலங்கை கொடுக்குமா என்ற கேள்வியும்  எழுகின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஏற்பட்டிருக்கிற இந்தப் பிராந்திய நெருக்கடி தொடர்பாகக் கவனம் செலுத்தி இலங்கையோடு தோல்வி கண்டு வரும் இந்தியா, ஈழத்தமிழர்கள் விகாரத்தைக் கையிலெடுக்கத் தயங்குகின்றது. என்பதையும் இங்கு அவதானிக்க வேண்டும்.

இலங்கையோடு முடிந்தவரை கீழுறங்கிச்செயற்பட முற்படும் அதேவேளை, ஈழத்தமிழர் விவாகரத்தைக் கருவியாகப் பாவித்தும் இலங்கையை இந்தியா அச்சுறுத்திய ஒரு காலமும் உண்டு.

ஆனால் இன்று 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக அகற்றிவிடுவதற்காக இலங்கை முயற்சி எடுக்கும் நிலையில், அதனைப் பொருட்படுத்தாது தங்கள் புவிசார் அரசியல் நோக்கில் இலங்கையோடு இந்தியா தமது நலன்சார்ந்து மாத்தரமே உரையாடுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்த கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர், மாகாண சபைத் தேர்தல்களை   நடத்துமாறு நீங்;கள்தான்; கேட்க வேண்டுமெனக் கூறியிருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல என்று தமிழ்த்தேசியக் கட்சிகள் அன்று முதல் கூறி வந்த நிலையிலும், 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என வலியுறுத்தி வந்த இந்தியா, தற்போது இலங்கை அரசாங்கத்துடன் அது பற்றிக்கூட பேசத் தயங்குகின்றது என்பதையே தூதுவரின் கருத்து எடுத்துக் காட்டியிருக்கிறது.

இலங்கை அதாவது சிங்கள ஆட்சியாளர்கள். ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சொல்வதைச் செய்வதாக இல்லை. ஆகவே பிராந்திய நலன்சார்ந்து வெட்கத்தைவிட்டு இலங்கையோடு பணிந்துபோக இந்தியா துணிந்துவிட்டது என்பதும் இங்கே புலனாகிறது.

இந்தப் பலவீனங்களினாலேதான், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை சர்வதேச அரங்கில் இருந்து முற்றகத் துடைத்தெறிய வேண்டுமென்பதால், சீனாவைக் காண்பித்து  அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் இலங்கை அதி உச்சக் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

அதுதான் ஐ.நாவில் புலிகளைத் தடை செய்யவுள்ள சூழ்ச்சியும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்யும் முயற்சியும்.

இந்த மாத முற்பகுதியில் ஜேர்மனியில் இருந்து தமிழ் இளைஞர்கள் நாடு கடத்தப்பட்டமையும் இதன் பின்னணியிலேதான்.

இதனால், வடக்குக் கிழக்குப் பொருளாதார உதவிக்காகவேனும் சீனாவோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருதடவை  உரையானாலே போதும் பிராந்தியத்தில் திடீர் மாற்றத்தைக் காணலாம் என்ற சிந்தனைகள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்துளளன.

சீனாவை ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் எதிர்க்கிறார்களெனக் கூறும் புதிய தந்திரோபாயம் ஒன்றை  இந்திய- இலங்கை அரசுகள் கையாளவும் முற்படுகின்றன. இந்த ஆபத்துக்குள் சிக்காமல் அறிவுசார்ந்து ஈழத்தமிழர்கள் உணர வேண்டிய காலமிது.