செய்திகள்

இலண்டன் தமிழர் சந்தை 2016: பிரம்மாண்டமான அளவில் நடத்த ஏற்பாடு

கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” நிகழ்வு இவ்வாண்டும் மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கடந்த வருடம்போலவே இம்முறையும் பிரித்தானிய வர்த்தக சம்மேளனமானது ‘நாச்சியார்’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து எதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் Harrow Leisure Centre இல் இந்த நிகழ்வை நடத்துகின்றது.

150க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல், பாடல், வேடிக்கை நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள், ஆடை-அலங்கார காட்சிகள் என்று பல்வேறுவிதமான களியாட்ட நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் ஐரோப்பாவில் இருந்து மட்டுமன்றி இந்தியா,இலங்கையில் இருந்தும் கலைஞர்கள் வந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். பல விலை கழிவுடன் கூடிய விற்பனைகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும். நுழைவு கட்டணமாக £3 மட்டுமே அறவிடப்படும்.

கடந்த வருடம் சுமார் 6000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து இந்த நிகழ்வுகளை பார்வையிட்டிருந்தார்கள். இந்த நிலையில் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரித்தானிய பாராளுமன்றத்தின் சபை முதல்வர் கிறிஸ் க்ரைலிங் கலந்துகொள்ள இருப்பதுடன் நிழல் நிதி அமைச்சர் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

“இலண்டன் தமிழர் சந்தை 2016” நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்றபோது விளக்கம் அளித்த பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம். திருவாசகம், நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் சில கண்காட்சி கூடங்கள் மட்டுமே இன்னமும் எஞ்சி இருப்பதால் முதலில் தொடர்புகொண்டு விருப்பம் தெரிவிக்கும் வர்த்தக முயற்சியாளர்களுக்கே அவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இலங்கையில் இருந்து பாடல் கலைஞர்களுடன் யாழ்ப்பான வர்த்தக சம்மேளன தலைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் மாநாட்டில் சுமார் 50 இற்கும் அதிகமான செய்தியாளர்களும் வர்த்தக பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான லிபரா இந்த நிகழ்வுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது. அத்துடன் LINKS LEGAL SOLICITORS , CARLTON LEISURE மற்றும் RUBY CATERING ஆகியவையும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றன.

Alpha Telecom, Vannakam London, Accountancy Group, Conversation-v, JNL, LongTek, Tamil Diplomat.com, samakalam.com மற்றும் Cartec Graphics ஆகியவையும் இந்த நிகழ்வுக்கு தமது அனுசரணையை வழங்குகின்றன.

London Tamil Market 2016 (2) London Tamil Market 2016 (3) London Tamil Market 2016 (4) London Tamil Market 2016 (5) London Tamil Market 2016 (6) London Tamil Market 2016 (8) London Tamil Market 2016 (9)