ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்ச்சியொன்றை சர்வதேச மனிதவுரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. வடமேற்கு லண்டன் Brent Oak பகுதியில் அமைந்திருக்கும் St.Alphage திருச்சபை மண்டபத்தில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொணடனர்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையினை ஐ.பி.சி. வானொலிப்பிரிவின் இணைப்பாளர் திரு. சதீசன் சத்தியமூர்த்தி
நிகழ்த்தினார். அவரதுரையில் இளம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் குறிப்பிட்டதுடன் அவர்களுக்கும் மூத்த ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி
பற்றியும் விபரித்தார்.
ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி. சுகி கோபி தமது தலைமையுரையில் இவ்வாண்டு காலமான மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்களைப் பற்றி நினைவுக் குறிப்பினையும் வழங்கினார். திரு. வரதராசா அவர்கள் சர்வதேச தமிழ ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ஜெர்மனி நாட்டுக்கான பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்த நிகழ்ச்சியில், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்ஆற்றிய பணி பற்றி மூத்த ஊடகவியலாளரும் ஆதவன் தொலைக்காட்சியில் பணியாற்றுபவருமான திரு. பிரேம் சிவகுரு, ஐ.பி.சி. தமிழ் நிறுவனத்தைச் சேரந்த மூத்த ஒலிபரப்பாளர் திரு. பரா பிரபா, ஆதவன் தொலைக்காட்சியின் இணைப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. இளையதம்பி தயானந்தா, சுயாதீன ஊடகவியலாளர் திரு. தியாகராசா திபாகரன், ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு. கோபி இரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். அவர்களது
உரைகளில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தகவல்களை ஆவணப்படுத்திலில் ஏற்படும் பின்னடைவான நிலை, அரசியல் மற்றும் அதிகாரத் தலையீடுகள் பற்றிய தமது கருத்துகளையும் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற அவாவுடன் துணிவோடும், அர்ப்பணிப்போடும் தாயகத்திலிருந்து ஊடகப்பணியாறிவரும் ஏழு இளம் ஊடகவியலாளர்களுக்கு, அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டிற்கான சிறப்பு விருதினை அண்மையில் காலமாகிய கருத்தோவியர் திரு. அல்பேர்ட் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.
விருதுகள் பெற்றோர் பற்றி விபரம்:
திரு. சிறிஞானேஸ்வரன் இராமநாதன் (ஆசிரியர், ‘மலை முரசு’ பத்திரிகை, திருகோணமலை)
திரு. செல்வராஜா இராஜசேகர் (ஆசிரியர், ‘மாற்றம்’, வெகுசன ஊடகவியலாளர் தளம்)
திரு. கமலநாதன் கம்சனன் (பத்திரிகையாளர்)
திரு. ஜெயராஜா துரைராஜா (ஜெரா) (ஆவணப்பட இயக்குனர், கட்டுரையாளர் )
திரு. உதயராசா சாளின் (சுயாதீன ஊடகவியலாளர்)
திரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் (செய்தியாளர் மற்றும் உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்)
திரு. விக்னேஸ்வரன் கஜீபன் (காணொளி செய்தியாளர்)
ஒன்றியத்தின் பொருளாளர் திரு. வேல் தர்மாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.





