எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவலை வெளியிடும் முன்னாள் கடற்படை சிப்பாய்
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட ராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்
இந்நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கண்கண்டதாக கூறப்படும் ஒருவர் பரபரப்புத் தகவல்களை வௌியிட்டுள்ளார்.
சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் SUDA CREATION சேனலில் இன்று ஞாயிறு மாலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வௌியாகியுள்ளது
குறித்த நிகழ்ச்சியில் தற்போதைக்கு வௌிநாட்டில் வதியும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கலந்து கொண்டிருந்தார். அவர் முன்னொரு காலத்தில் கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய பிரியசாந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடற்படைச் சிப்பாய் பிரியசாந்தவின் தகவல்களின் பிரகாரம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, மட்டக்களப்பின் எருமைத் தீவில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் குறித்த சிப்பாய் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மட்டக்களப்பின் எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் முதல்தடவையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-(3)




