எதிர்கட்சித் தலைவர் 2016 இல் ஏமாந்த தலைவரா…? ஏமாற்றப்பட்ட தலைவரா..? வவுனியா மாணவர்கள் கேள்வி
எதிர்கட்சித் தலைவர் 2016 இல் ஏமாந்த தலைவரா..?, ஏமாற்றப்பட்ட தலைவரா…? என வவுனியா மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் 84 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி 21 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக மாணவர்களால் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்ட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ‘ வடக்கில் நல்லாட்சியா? இராணுவ ஆட்சியா?, பிலவுக்குடியிருப்பு மாணவர்களின் கல்வி உனக்கு விளையாட்டா?, எதிர்க்கட்சி தலைவர் 2016இல் ஏமாந்த தலைவரா? ஏமாற்றப்பட்ட தலைவரா?, கேப்பாபுலவு மாணவர்களின் கல்வி அடிப்படை உரிமை இல்லையா?, காணிக்காக போராடும் மக்களுக்கு தீர்வை வழங்கு, மாணவர்களின் கல்வி உர்மையை தடுக்காதே’ போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.
இப்போராட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, கோவிற்குளம் இந்துக்கல்லூரி, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியலாயம், ஓமந்தை மத்திய கல்லூரி, செட்டிகுளம் மகாவித்தியாலயம், கனகராயன்குளம் மகாவித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.


N5




