எந்தவொரு நாடும் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கவில்லை! அரசின் வேலைத்திட்டமே காரணம்: சஜித் பிரேமதாஸ சொல்கிறார்
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் காரணமாக இந்தியாவோ, அமெரிக்காவோ , பிரித்தானியாவோ எந்தவொரு அழுத்தத்தையும் இனிமேல் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்காது. எங்களது செயற்பாடுகள் மீது சர்வதேசம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
உள்ளக விசாரணைகள் தொடர்பில் இலங்கை மக்களின் தீர்மானத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் கூற்றினால் நாடு எவ்வாறு பிளவு படும் எனவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பினார்.
அநுராதபுரத்தில் வீட்டு கடன் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் நீண்டகாலமாக நிலைகொண்டிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நாம் வெற்றிக்கொள்ளவில்லை. தற்போது புதிய பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான விதைகள் நடப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது அவையனைத்தும் முடக்கப்பட்டு இனவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது.
நாட்டில் பள்ளிவாசல் , கோயில்கள் , கிறிஸ்தவ தேவஸ்தானங்கள் மற்றும் விகாரைகளின் ஊடாக இனவாதம் தூண்டப்பட்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டை இரண்டாக பிளவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிரணியினர்குற்றம் சாட்டுகின்றனர். இதற்காகவே மனித உரிமைகள் ஆணையாளர் செய்த அல் ஹுசைன் இலங்கை வருகை தந்ததாக எதிரணியினர் கோஷமிட்ட வண்ணமுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ இராணுவ வீரர்களை எக்காரணம் கொண்டும் சர்வதேசத்தின் முன்னிலையில் மண்டியிட செய்யப்போவதில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் சர்வதேசம் எமது அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்க மாட்டாது.
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் காரணமாக இந்தியாவோ, அமெரிக்காவோ , பிரித்தானியாவோ எந்தவொரு அழுத்தத்தையும் இனிமேல் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்காது.
இதேவேளை உள்ளக விசாரணைகள் தொடர்பில் இலங்கை மக்களின் தீர்மானத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் ஹுசைனின் வருகையினால் நாடு எவ்வாறு பிளவுபடும். மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை எமக்கு சாதகமாக முடிவடைந்துள்ளது. ஆகவே இது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நல்லாட்சியின் போது மாளிகை நிர்மாணிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து செயற்படப்போவதில்லை. அதற்கு எதிர் மாறாக வீடு இல்லாத இலட்ச கணக்கான மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கே அதிகளவில் முக்கியத்துவம் செலுத்தப்படும் என்றார்.
R-06




