செய்திகள்

ஐஎம்எப் கடனுதவி தொடர்பில் இன்று வாக்கெடுப்பு!

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த கடனுதவி தொடர்பில் இன்று(28) மூன்றாவது நாளாகவும் விவாதம் நடைபெறுகிறது.

இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கும் எதிராக வாக்களிப்பதற்கும் பல்வேறு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய(28) வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா சபாவ மற்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்களிப்பு தொடர்பான நிலைப்பாடு குறித்து இன்று பிற்பகல் தமது கட்சி தீர்மானிக்குமென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வாக்கெடுப்பில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய காரணமாக கொழும்பிலிருந்து வௌியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென அறிக்கையொன்றினூடாக அவர் கூறியுள்ளார்.

-(3)