ஐரோப்பா செல்லும் கீர்த்தி சுரேஷ்
தெலுங்கில் நாகேஷ் குக்கனூர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக சமீபத்தில் ஒப்பந்தமான கீர்த்தி அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக பங்கேற்று வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் 45 நாட்கள் நடைபெற இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். படக்குழு தற்போது இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.
சர்கார் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வேறு எந்த படமும் தமிழில் வெளியாகவில்லை. தெலுங்கில் பெரும் கவனம் பெற்றுத்தந்த நடிகையர் திலகம் படத்திற்குப் பின் அடுத்த படம் என்ன என்று தெலுங்கு ரசிகர்களும் காத்திருக்க, அவர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அமித் ஷர்மா இயக்கும் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது.(15)




