ஒரு வருட அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தால் காணாமல்போனோரை கண்டுபிடித்திருப்போம்: பரணகம
எமது ஆணைக்குழுவுக்கு காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்கு இன்னும் ஒரு வருட கால அவகாசமும் மூன்று விசாரணைக் குழுக்களும் வழங்கப்பட்டிருந்தால் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடித்திருப்போம் என்று காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் தலைவர் மெக் ஷ்வல் பரணகம தெரிவித்தார்.
காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நாங்கள் விரைவில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்போம் என்றும் பரணகம குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மெக்ஷ்வல் பரணகம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
“காணாமல் போனவர்கள் குறித்து விசாரித்து வந்த எமது ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன் பின்னர் நாங்கள் எமது விசாரணை அமர்வுகள் மற்றும் நாங்கள் என்ன செய்தோம் என்பது தொடர்பில் இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிப்போம். தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் புதிய அலுவலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதால் இதன் பின்னர் அந்த அலுவலகம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகின்றோம்.
இதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பில் சுமார் 19000 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. ஆனால் அவற்றில் 4000 க்கும் மேற்பட்டவைகள் இரண்டு தடவைகள் வந்துள்ளன. இதேவேளை காணாமல் போனவர்களில் ஒரு சிலர் வெளிநாடுகளில் இருப்பார்கள் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறான ஒரு சந்தேகம் எமக்கு இருக்கின்றது. ஆனால் எத்தனை பேர் இவ்வாறு இருப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால் காணாமல் போனதாகக் கூறப்படும் சிலர் வெளிநாடுகளில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.
மேலும் எமது ஆணைக்குழுவுக்கு காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்கு இன்னும் ஒரு வருட கால அவகாசமும் மூன்று விசாரணைக் குழுக்களும் வழங்கப்பட்டிருந்தால் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடித்திருப்போம். அதாவது தற்போது எம்மிடம் ஒரு விசாரணை குழுவே உள்ளது. இன்னும் இரண்டு விசாரணை குழுக்கள் மேலதிகமாக கிடைத்திருந்தால் நாம் மேலும் விசாரணைகளை விரிவுபடுத்தியிருப்போம். ஆனால் எமக்கு அந்த வசதி கிடைக்கவில்லை.
அத்துடன் எமது ஆணைக்குழுவுக்கு விசாரணைகளை நடத்துவதற்கு போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை. இன்னும் ஒருவருட காலம் கிடைத்திருந்தால் நாங்கள் மேலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருப்போம். அதாவது காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறியிருப்போம் என்றார்.
R-06




