செய்திகள்

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம்: கடற்படையினரின் விளக்கம்!

கச்சத்தீவு புத்தர் சிலை குறித்து கடற்படையினர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கச்சத்தீவின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தயும் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவைத் தவிர, இந்த தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் அங்கு இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் பராமரிக்கப்படுகிறது.
இந்த கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக, ஒரு சிறிய புத்தர் சிலை கடற்படை இணைப்பின் கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேவாலயத்தைத் தவிர, இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் செய்ய முடியாது, மேலும் கடற்படையினர் தற்காலிகமாக கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கச்சத் தீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என்றும், எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது என்றும் கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
-(3)