காணி விடுவிப்பும் ஜெனீவா கூட்டத் தொடரும்
“வடக்கில் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி எமது மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கூறிய 6 மாதங்கள் இம்மாத நடுப்பகுதியில் முடிவடைகின்றது. எனவே ஜனாதிபதியின் பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம். ஒரு வாரத்திற்குள் பதில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கின் றோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். இருந்த போதிலும், வாக்குறியளிக்கப்பட்டவாறு காணி விடுவிக்கப்படவில்லை என்றால், தமது அடுத்த கட்டச் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதையிட்டு மாவை சேனாதிராஜா எதனையும் குறிப்பிடவில்லை. அவ்வாறு எதனையும் சொல்லியிருந்தாலும், அதனைச் செயற்படுத்தும் நிலையில் அவர் இருக்கப்போவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் உள்ள நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க வைக்கும் நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். வலிகாமம் வடக்கு சுமார் மூன்று தசாப்த காலமாக இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆக்கிரமிப்புக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பின்னர் பிரகடனப்படுத்தப்பட்டது. மூன்று தசாப்த காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் தமது மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
போர் முடிவடைந்தும் முடிவுக்கு வராத வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினை ஆட்சி மாற்றத்துடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் ஆட்சி மாற்றத்துக்கு ஆதவாக வாக்களித்தது இந்தப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், ஒன்றரை வருடத்தில் வலிகாமம் வடக்கில் சில பகுதிகள் மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அது முழுமையாக இடம்பெறவில்லை. இப்போது அதற்கு ஒரு கால வரையறை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் இம்மாத நடுப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தார். இரு வார காலப்பகுதியில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, காணிப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படுமா என்பதுதான் இன்றுள்ள கேள்வி!
போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகள் மக்களிடம் மீள ஒப்படைக்கப்படதமை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. வலி வடக்கு பொருளாதார ரீதியாகவும் முக்கியமானது. வளமான மண்ணையும், மீன்பிடி வளத்தையும் கொண்ட ஒரு பூமி அது. வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும், அதிகளவு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தப் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்படுவது அவசியம். இதனைத் தாமதப்படுத்த அல்லது அதனை மறுப்பதற்கு இரண்டு காரணங்களை அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஒன்று பலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு. இரண்டாவது மயிலிட்டி துறைமுகப்பகுதியில் ஆயுதக் களஞ்சியங்கள் இருப்பது. இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்குப் பதிலாக பூநகரிப் பகுதியில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்கமுடியும் எனத் தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசாங்கம் பரிசீலனை செய்யக்கூட தயாராக இருக்கவில்லை. வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இலகுவாக வந்து செய்லக்கூடிய பகுதியாக பூநகரியே உள்ளது. அத்துடன், சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நிலமும் அங்கிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. பலாலி விவசாயத்துக்கு வளமான பூமி. விமான நிலைய விஸ்த்தரிப்புக்கு என அங்கு காணிகளைச் சுவீகரிப்பது தமிழர்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு விடயம். அதனால்தான் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு என ஒரு அடி நிலத்தைக் கூட இனிமேல் சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார். அதேபோல மயிலிட்டி மீன்பிடிக்குப் பெயர்போன ஒரு பகுதி. ஆயுதக்களங்சியம் அங்கிருப்பதாகச் சொல்லி அதனை மீள ஒப்படைக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாததது. ஆயுதக் களஞ்சியத்தை இடமாற்றம் செய்ய முடியும்.
காணி விடுவிப்பது என்பது வெறுமனே ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரைச் சமாளிப்பதற்கான செயற்பாடாக இருந்துவிட முடியாது. பொறுப்புக்கூறல் உட்பட பல விடயங்களில் அசமந்தப் போக்கில் செயற்பட்ட அரசாங்கம் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகப்போகின்றது என்றவுடன் துரிதமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒரு புறம் ஜெனீவாவைச் சமாளிக்க வேண்டும். மறுபுறம் மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் கொதித்தெழுவார்களாக என்ற அச்சம். இனவாத சக்திகளை புறக்கணித்து செயற்படும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதனால்தான் ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளைக் கூட முழுமையாகச் செயற்படுத்தாமல் சமாளித்துப்போக அரசாங்கம் முயற்சிக்கிறது. பொறுப்புக்கூறல், காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைத்தல் என்பவற்றில் உள்ளுர் அழுத்தங்களின் செல்வாக்கு அதிகமாக இருப்பதைக் காணமுடிகின்றது.
தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்பதில்தான் சர்வதேச சமூகம் அதிகளவு அக்கறை காட்டுகின்றது. ஜீ -7 நாடுகளின் மாநாட்டுக்கு விஷேட விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டமை உட்பட பல்வேறு நிகழ்வுகளும் சர்வதேசத்தின் இந்த அக்கறையின் வெளிப்பாடுதான். ஆக, சர்வதேச அழுத்தங்களின் மூலமாக விடிவு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருப்பதென்பது அர்தமற்றது. ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசின் மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நிலையில் இல்லை. மிதவாத அரசியலின் மூலம் எதனையும் சிங்களத் தலைவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாக சரித்திரம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. தமிழ்த் தரப்பு அரசின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாக தம்மைப் பலப்படுத்திக்கொள்வதன் மூலமாகவே இன்றைய காலகட்டத்தில் எதனையாவது சாதிக்க முடியும்.
ஞாயிறு தினக்குரல்: 2016-06-05